தலை துண்டிப்பு கொலைகள்- நாகா பழங்குடிகளின் 'தலைவெட்டி' கலாசாரத்துக்கு புத்துயிர் தருகிறதா தமிழகம்?
சென்னை: ஆதி மனிதன் காலம் முதல் நாடு விடுதலை அடைவதற்கு சற்று முன்னர் வரை மனித தலைகளை வேட்டையாடுவதை வீரத்தின் அடையாளமாக கொண்டாடியவர்கள் நாகாலாந்து பழங்குடிகள். ஆங்கிலேயர் ஆட்சியில் தடை செய்யப்பட்ட மனித தலைகளை வெட்டும் கலாசாரத்துக்கு அண்மைக்காலமாக தமிழகம் புத்துயிர் தருகிறதோ? என்ற கேள்வியை அடுத்தடுத்த கொலை சம்பவங்களும் தலை துண்டிப்பு நிகழ்வுகளும் எழுப்புகின்றன.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நிகழ்ந்த சில நிகழ்வுகளை மட்டும் இங்கே பார்ப்போம்... சென்னை தாம்பரம் அருகே எருமையூர் கிறிஸ்தவ தேவாலயம் வாசலில் மனித தலை ஒன்று வீசப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் உடலை தேடத் தொடங்கினர். சித்தேரி ஏரிக்கரை பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட உடல் கிடந்தது. பின்னர்தான் எருமையூர் வெற்றிவேல் என்ற சட்டக்கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது.
தாம்பரம் அருகே எருமையூர் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபரில் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். அந்த படுகொலைக்கு பழிக்கு பழியாகவே வெற்றிவேல் கொல்லப்பட்டார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
'அதே பாணி..' திண்டுக்கல்லில் பயங்கரம்.. ஒரே நாளில் இருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை.. பரபரப்பு
நெல்லை படுகொலைகள்
நெல்லை அருகே கீழச்செவலில் சங்கர சுப்பிரமணியன் என்பவர் கடந்த வாரம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது தலை துண்டிக்கப்பட்டு காட்டுப் பகுதியில் வீசப்பட்டது. ஆனால் போலீசாருக்கு தலை கிடைக்காமல் போனதால் உடலை மட்டும் முதலில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்கு அடுத்த நாளே அதே போலீஸ் லிமிட்டில் மாரியப்பன் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார். அவரது தலையும் துண்டிக்கப்பட்டது. மாரியப்பன் தலையை முதல் நாள் படுகொலை செய்யப்பட்ட சங்கர சுப்பிரமணியன் உடல் கிடந்த இடத்தில் கொலையாளிகள் வீசிச் சென்றனர். அப்பட்டமாக இது முன்விரோதம் காரணமான பழிக்குப் பழியாக நடந்த கொலை என தெரியவந்தது.
வாணியம்பாடி தலை துண்டிப்பு
வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மாநில பொறுப்பாளர் வசீம் அக்ரம், தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. அப்போதும் அந்த கும்பலுக்கு ஆத்திரம் தீரவில்லை. வசீம் அக்ரமின் தலையை துண்டாக வெட்டி வீசிவிட்டு தப்பிச் சென்றது. இந்த வழக்கில் கஞ்சா கோஷ்டியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரவுடியின் கூட்டாளி
சென்னை மயிலாப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபரும் A+ கேங் லீடர் மயிலை சிவக்குமாரின் கூட்டாளியுமான கோபி என்பவரை மர்ம நபர்கள் கடந்த வாரம் வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவத்திலும் கோபியில் தலையை துண்டித்திருக்கின்றனர் கொலையாளிகள். கடந்த மார்ச் மாதம்தான் மயிலை சிவக்குமாரை அவரது எதிர்கோஷ்டி போட்டுத் தள்ளியது. இதையடுத்து சிவக்குமாரின் கூட்டாளி கோபியின் கணக்கையும் கொலையாளிகள் முடித்துவிட்டனர்.
திண்டுக்கல் கொலைகள்
திண்டுக்கல் நகரில் நேற்று ஒரே நாளில் இரண்டு படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்தன. தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, மூலக்கரை பண்ணையார் கோஷ்டிக்கு இன்பார்மராக இருந்த நிர்மலாதேவி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது தலையை தனியாக வெட்டி எடுத்த கொலையாளிகள் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூக்கிச் சென்று நந்தவனப்பட்டியில் உள்ள பசுபதி பாண்டியன் வீட்டு முன்பாக வைத்துச் சென்றனர். நேற்று மாலை திண்டுக்கல் அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிலையத்தில் ஸ்டீபன்ராஜ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது தலையை துண்டித்து அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிலையத்திலும் உடலை மட்டப்பாறை பகுதியிலும் கொலையாளிகள் வீசிச் சென்றனர்.
கூலிப்படையினரின் வெட்டு
கூலிப்படையினர் கொலைகளை போலீஸார் வகைப்படுத்துவார்கள். தலையில் சரமாரியாக வெட்டி மண்டை ஓட்டை சிதைத்து மூளை வெளியே வருவதை பார்த்துவிட்டு கூலிப்படையினர் செல்வர். இதற்கு காரணம் ஒருவனை தாக்கும்போது முதலில் தலையில் தான் வெட்டுவார்கள், அப்போதுதான் அவன் ஓடி தப்பிக்க முடியாது நிலைகுலைந்து விழுவான். பின்னர் அந்த கும்பல் சரமாரியாக தலையில் முகத்தில் வெட்டும். இதில் தலை முழுவதும் சிதைந்து தலையே துண்டானதுபோல் தெரியும். இதை கூலிப்படை வெட்டு என போலீஸார் சொல்வார்கள். இதேபோன்ற வெட்டுகள் கடந்த சில மாதங்கள் நடந்த கொலைகளின் கோரத்தில் காட்சிகளில் காணலாம்.
நாகா பழங்குடிகள் கலாசாரம்
இத்தனை சம்பவங்களும் கடந்த ஒருவாரத்தில் மட்டுமே நிகழ்ந்தவை. இப்படி மனித தலைகளை வெட்டுவதை வீரத்தின் வெளிப்பாடாக கருதியவர்கள் தமிழர்கள் அல்ல. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து ஆதிவாசிகள்தான் மனித தலைகளை வெட்டுவதை வீரமாக கொண்டாடியவர்கள். நாகா ஆதிவாசிகளில் கோன்யாக் என்கிற ஒரு பிரிவினர் உள்ளனர். இவர்கள்தான் மனித தலைகளை வெட்டுவதில் ஸ்பெஷலிஸ்ட். மோன் என்கிற மாவட்டத்தில் இன்றளவும் மாஜி தலைவெட்டி மனிதர்களில் சிலர் வசித்தும் வருகின்றனர். தங்களுக்கு எதிரான இனக்குழுவை சேர்ந்தவர்களின் தலையை வெட்ட வேண்டும் அல்லது தலைக்கு பதிலாக காதையாவதுஅறுப்பதுதான் அவர்களுக்கு வீரம். அப்படி வெட்டி எடுத்து வரும் தலையை பாதுகாப்பாக வைத்திருப்பவர்கள் கோன்யாக் பழங்குடிகள். இதனால் சில வீடுகளில் மண்டை ஓடுகள் குவிந்து கிடக்கும். நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இதனை விரிவாக விவரிக்கும் ஆவணங்களும் உள்ளன.
தலைவெட்டி கலாசாரம் புத்துயிர் பெறுகிறதா?
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் மனித தலைகளை வெட்டும் கொடூரம் தடை செய்யப்பட்டது. உலகம் முழுவதும் ஆதிவாசி இனக்குழுக்களிடம் இந்த தலைவெட்டுதல் மரபு இருந்து வந்தது. ஆனால் அனைத்து நாடுகளும் படிப்படியாக தலைவெட்டுதலை தடை செய்தன. உலகில் தலைவெட்டும் மரபை நிறுத்திய கடைசி ஆதிவாசி இனமும் நாகாலாந்தின் கோன்யாக் பழங்குடிகள் என்கிறது சரித்திரம். ஆங்கிலேயர் ஆட்சியில்தான் இது நிகழ்ந்தது. இந்த சரித்திரத்தைத்தான் இப்போது தமிழகத்துக்கு கொலையாளிகள் தங்களது ரத்த சரித்திரங்கள் மூலம் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.. உலகில் மனித தலைகளை வேட்டையாடுகிற நரமனிதர்கள் வாழும் இடமாக கல்வியிற் சிறந்த தமிழ்நாடு உருமாறிப் போய்க் கொண்டிருப்பது பெருமை அல்ல பேரவலம்... வீரம் அல்ல.. வன்மம்.. இந்த கொலைபாதகர்கள் கனவிலும் இப்படி சிந்திக்காத வகையிலான கடும் நடவடிக்கைதான் நமக்கு இப்போதைய தேவை.. அதைத்தான் பொதுமக்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.