இலங்கைக்கு நாம் தமிழர் சார்பில் உதவி! துயர் துடைக்க பொருளுதவி கோரும் சீமான்
சென்னை: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இலங்கையில் உள்ள ஈழத்து மக்கள் உள்பட அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் உதவி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பொருளுதவி வழங்கும்படி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு இந்தியா சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பிலும் உதவிகள் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தான் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய அனைவரும் நன்கொடை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் இன்று வேண்டுகோள் விடுத்தார்.

நாம் தமிழர் உதவி
இதன் தொடர்ச்சியாக இலங்கையில் உள்ள ஈழ தமிழர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் உதவ நாம்தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. இதனால் அரிசி, பருப்பு உள்பட துயர் துடைப்பு பொருட்கள் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுமக்களிடம் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஈழ தமிழர்கள் பாதிப்பு
இலங்கை இனவாத அரசாங்கத்தின் 30 ஆண்டுகால இன அழிப்புப்போர் காரணமாக அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் ஈழச்சொந்தங்கள் மட்டுமல்லாது, சிங்கள மக்களும் சிக்குண்டு சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், அங்கிருந்து வரும் செய்திகள் பெருங்கவலை அளிக்கின்றன. ராஜபக்சே அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்கள் இரண்டு மாதக்காலத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் அரச வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது கொடுங்கோல் சிங்கள அரசு.

வலி அனுபவிக்கும் சிங்கள மக்கள்
அரைநூற்றாண்டு காலமாக தமிழின மக்கள் அனுபவித்து வந்த கொடுமைகளின் வலியையும், அரசதிகாரத்தின் கொடுங்கோன்மையையும் தற்போது சிங்களப்பொதுமக்களும் மெல்ல மெல்ல உணரத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடே, போராட்டக்களங்களில் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயர் சிங்கள மக்களால் உச்சரிக்கப்படுவதும், புலிகளின் ஆட்சியின் கீழ் இருந்திருந்தால் இந்நிலை வந்திருக்காது என வெளிப்படும் அம்மக்களின் எண்ணவோட்டமுமாகும்.

உதவுவது தார்மீக கடமை
மண்ணையும், மக்களையும் காக்க, இன எதிரிகளோடு ஆயுதமேந்திச் சண்டையிடும் விடுதலைக்கான மறப்போரிலும் அறத்தைக் காத்து, சத்தியத்தின் திருவுருவாய் நின்ற தலைவர் பிரபாகரன் அவர்களது வழியில் வந்த நாம் துன்பப்படும் மக்கள் எவராயினும், எவ்விதப்பாகுபாடும் பாராமல் அவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி துயர்போக்க இயன்றதைச் செய்ய வேண்டியது நமது தார்மீகக் கடமையாகும். அதுவே தமிழரின் மாண்பு; நமது முன்னோர்கள் வகுத்துத் தந்த உயர்நெறிக்கோட்பாடாகும். அந்நிலத்தில் வாழும் அனைத்து மக்களும் கடுமையானப்பொருளாதார நெருக்கடிக்கு ஆட்பட்டு, பசியிலும், வறுமையிலும் வாடி வருகின்றனர்.

நாம் தமிழரின் முன்னெடுப்பு
எனவே, தற்போதைய நெருக்கடிமிகு சூழலில் அம்மக்களின் துயரத்தைப்போக்கும் முன்னெடுப்பை நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளவிருக்கிறது. அதுசமயம், சிங்கள அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழத்துச்சொந்தங்கள் உள்ளிட்ட அம்மக்களுக்கு உதவுவதற்காக மாநிலம் முழுமைக்கும் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படவிருக்கிறது. ஆகவே, அரிசி, பருப்பு, எண்ணெய் வித்துகள், தானியங்கள், உலர் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட துயர்துடைப்புக்கான அத்தியாவசியப் பொருட்களை, சென்னை, வளசரவாக்கத்தில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலுக்கு அனுப்பியோ, நேரடியாகவோ தந்து மக்களின் துயர்போக்க தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டுமென கோருகிறேன்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications