அதிமுக அரசின் ஏமாற்று ராஜ்யமும்... வெற்று அறிவிப்புகளும்... மு.க.ஸ்டாலின் சாடல்..!
சென்னை: அதிமுக அரசின் ஏமாற்று ராஜ்யத்தில் வெற்றி அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக அவர் வேதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கண்டனம்
''புதிதாகத் தொடங்கப்பட்ட 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இன்மையால் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது."
"மாணவர்களின் கல்வியில் விபரீத விளையாட்டுகளை நடத்த முயற்சிக்காமல், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனங்கள் ஆகிய பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்"

வெற்று அறிவிப்பு
''எடப்பாடி அ.தி.மு.க. அரசின் "ஏமாற்று ராஜ்யத்தில்" அறிவிப்பு என்றாலே - அது வீணாகும் வெற்று அறிவிப்புதான் என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது''.
''அனைத்துத் துறைகளிலும் கோட்டை விட்டுள்ள அ.தி.மு.க. அரசு - கல்வித்துறையையும் கோட்டை விட்டு - அங்கும் சீரழிவுகளை ஏற்படுத்திவிட்டுப் போக துடிப்பது புரிகிறது''.

குற்றச்சாட்டு
''புதிய கல்லூரிகள் ஆரம்பித்து - அடிப்படை வசதிகளை இல்லாமல் மாணவர்களைச் சேர்த்து இப்படியொரு அவலத்தை எடப்பாடி அரசு ஏன் உருவாக்க வேண்டும்? மாணவர்களின் எதிர்காலக் கல்வியை ஏன் அ.தி.மு.க. அரசு கலைத்துச் சீர்குலைக்க வேண்டும்?''
''புதிய கல்லூரிகள் அறிவிப்பு மட்டுமல்ல - புதிய மாவட்டங்கள் அறிவிப்பும் அ.தி.மு.க. ஆட்சியில் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது - அரைவேக்காட்டுத் தனமானக் தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதற்கு இதைத் தவிர வேறு உதாரணம் தேவையில்லை''.

விபரீத விளையாட்டு
''ஆகவே, இனியும் தாமதிக்க வேண்டாம்! பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்குத் தாமதமின்றி ஆன்லைன் வகுப்புகளை நடத்திட வேண்டும் என்றும், அவர்கள் வெற்றிகரமாகப் பருவத் தேர்வினை எழுதுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்''.
''மாணவர்களின் கல்வியில் விபரீத விளையாட்டுகளை அ.தி.மு.க. அரசு நடத்திட முயற்சிக்க வேண்டாம்!''












Click it and Unblock the Notifications