மாநகர பேருந்தின் கூரையில் ஏறிய மாணவர்கள்... தட்டிக்கேட்ட கண்டருக்கு அடி உதை! சென்னையில் பரபரப்பு
சென்னை: அரசுப் பேருந்தின் கூரையின் மீது ஏறிய மாணவர்களை கண்டித்த கண்டக்டரை தாக்கிவிட்டு சென்ற சம்பவம் திருவொற்றியூரில் நடைபெற்றுள்ளது.
Recommended Video
மாணவர்கள் நடத்துநரை தாக்கிவிட்டு சென்றதால் மாநரப் பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கண்டக்டர், ஓட்டுநரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பேருந்து புறப்பட்டு சென்றது.

மாணவர்கள் படியில் பயணம்
சென்னை பாரிமுனையை அடுத்த வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து எண்ணூர் நோக்கி சென்னை மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. தடம் 56 எண் கொண்ட பேருந்து திருவொற்றியூர் எல்லை அம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது. பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டபோது சில மாணவர்கள் ஓடிவந்து ஏறி படியில் நின்றுகொண்டனர். அப்போது பேருந்து ஓட்டுநர் மாணவர்களை பார்த்து படிக்கெட்டில் இருந்து பேருந்துக்குள் வருமாறு கூறினார்.

பேருந்து கூரைமேல் ஏறினர்
இதை ஏற்க மறுத்த மாணவர்கள் பேருந்தின் கடைசி இருக்கையின் ஜன்னல் மீது காலை வைத்து பேருந்தின் கூரை மீது ஏற முயன்றனர். இதை பார்த்த பயந்து போன பெண்கள் மாணவர்களை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர். ஆனால் அவர்கள் பொருட்படுத்தவில்லை. மாணவர்கள் கீழே விழுந்தால் உயிர் தப்பாது என்பதால் நடத்துநர் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுனரிடம் கூறினார். உடனே பேருந்து நிறுத்தப்பட்டது. மீண்டும் பேருந்து புறப்பட்டபோது மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டே சாகசம் செய்துள்ளனர். மீண்டும் பேருந்து நிறுத்தப்பட்டது.

நடத்துனர் மீது தாக்குதல்
பேருந்துக்குள் வந்தால்தான் போகமுடியும் என்று கண்டக்டர் கூற ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கண்டக்டரை சரமாரியாக அடித்துவிட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது. இதை அடுத்து பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து போலீசாருக்கு நடத்துனர் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த திருவொற்றியூர் காவல் நிலைய போலீசார் கண்டக்டரிடம் புகாரை வாங்கிக் கொண்டனர். பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மாணவர்களின் சீருடை நிறத்தை வைத்து அவர்கள் எந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவர்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோருக்கும் போலீசார் தகவல் அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

படியில் பயணிப்பது வாடிக்கை
சமீபத்தில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் பள்ளி மாணவன், மாணவி ஓடும் ரயிலில் அபாயகரமாக எறியும், கால்களை நடைமேடையில் தேய்த்தபடியும் பயணம் செய்து வீடியோ வைரலாக பரவியது. ஓடும் ரயிலில் ஆபத்தான சாகசம் செய்த பள்ளி மாணவியை நேரில் அழைத்து திருவள்ளூர் எஸ்.பி. வருண் குமார் அறிவுரை வழங்கினார். பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணரமால் படிக்கட்டில் தொங்கி செல்வதும், நடத்துநர்கள் கண்டிப்பதும் வழக்கமாக இருந்து வருவது வாடிக்கையாகி விட்டது என பொதுமக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications