பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு யாருக்கானது.. பாண்டேக்கு, சுப வீரபாண்டியன் சவால்
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு அனைத்து ஜாதி பிரிவைச் சேர்ந்த ஏழைகளுக்கும் பொருந்தும் என்று, பத்திரிக்கையாளர் ரங்கராஜன் கூறிய கருத்தை, மறுத்து, அதை நிரூபிக்க சவால் விடுத்துள்ளார் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன்.
சாணக்யா என்ற தனது யூடியூப் சேனலில் ரங்கராஜ் பாண்டே சமீபத்தில், சபாஷ்... ஹிந்துக்களை நோக்கி திமுக..? பாண்டே பார்வை , என்ற பெயரில், ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர், தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து வகை ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடும் அப்படியேத்தான் இருக்கிறது என்றும், பொருளாதாரத்தில் பிற்படுத்தோருக்கான இட ஒதுக்கீட்டிலும், அனைத்து பிரிவினரும் விண்ணப்பிக்கலாம் என்றும் பாண்டே கூறியிருந்தார்.
"பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை, முற்பட்ட வகுப்பினருக்கு என்று பார்க்க முடியாது. அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏழைகளாக இருந்தால் போதுமானது. அவர்களுக்கான இட ஒதுக்கீடும் அப்படியே இருக்கிறது" இவ்வாறு ரங்கராஜ் பாண்டே தெரிவித்திருந்தார்.
கம்ப்யூட்டர் இன்ஜினியர்னா என்ன.. காய்கறி விற்றால் என்ன.. இதுல கவுரவம் எங்க வந்துச்சு.. சபாஷ் சாரதா!
சுப வீரபாண்டியன் பதில்
இதற்கு பதிலளித்து, திராவிடம்100 என்ற யூடியூப் சேனலில் சுப வீரபாண்டியன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சுப வீரபாண்டியன் கூறியது இதுதான்: நாம் என்ன பேச வேண்டும் என்று அவர்கள் தீர்மானிக்கக் கூடாது. அவர்கள் என்ன பேசவேண்டும் என்பதையும் நாம் தீர்மானிப்போம். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு என்பது இன்றைக்கு இருப்பதிலேயே அடிப்படையான முதன்மையாக ஒரு கோட்பாடு. எனவே இந்த இடத்தில் நான் வெளிப்படையாக ஒரு அறை கூவலை விடுக்கிறேன்.
சவால்
மேடைப்பேச்சு பேசுகிறபோது சவால் விடுகிறேன் என்று சொல்வார்கள். அப்படி நாம் செய்வதெல்லாம் அத்தனை நாகரிகம் இல்லை என்று கருதினாலும்கூட வேறு வழி இல்லை. சிலவற்றை எடுத்துக்காட்டி, கேட்க வேண்டியவர்களை நோக்கி கேட்க வேண்டியதாக உள்ளது. சபாஷ்... ஹிந்துக்களை நோக்கி திமுக, என்ற பெயரில் பாண்டே, ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கிறார்கள். பொருளாதார அடிப்படையில் பலவீனமானவர்களுக்கான இட ஒதுக்கீட்டில், மேல் ஜாதி என்று சொல்லுகிறோமே, அவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அதில் எஸ்சி, எஸ்டி என யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். இப்படி ஒரு பச்சை பொய் சொல்லலாமா?
பொருளாதாரத்தில் பின்தங்கியோர் யார்
நீங்கள் சொல்வதற்கு நேர் எதிராக உண்மை இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 124 ஆவது திருத்தம் பற்றி நீங்கள் அறிவீர்கள். இந்த திருத்தத்தில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்கள் என்றால் யார்? என்ற விளக்கத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளிவந்துள்ள ஆணையில், அந்த வரையறை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அந்த ஆணை எண் f12-4/2019-u1. இதில் எங்கும் தேட வேண்டாம். முதல் பத்தியிலேயே விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோர் என்றால் யார் என்று அங்கே எப்படி சொல்லப்பட்டுள்ளது என்று தெரியுமா? சமூகத்தின் அடிப்படையிலோ, கல்வியின் அடிப்படையிலோ, பின் தங்கியிருப்பவர்களுக்கோ, ஒடுக்கப்பட்டுள்ளவர்களுக்கும், பட்டியலினத்தவருக்கும், பழங்குடி மக்களுக்கும் இதில் இடமில்லை. அவர்கள் இந்தப் பெயரின் கீழ் வரமாட்டார்கள் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
வருத்தம் தெரிவிக்க தயாரா
எனவே நான் நேரிடையாக கேட்கிறேன். பாண்டே அவர்களே மற்றவர்களை விட நீங்கள் கொஞ்சம் நாகரீகமாக பேசுபவரை போல காட்டிக் கொள்வதால் கேட்கிறேன். நான் சொல்கிற இந்த ஆணையை எடுத்து, சரி பார்த்து, நான் சொன்னது சரி, நீங்கள் சொன்னது சரி இல்லை என்று தெரியவந்தால், அடுத்த நாள் மாலையே இதற்காக ஒரு வருத்தத்தை தெரிவித்தால் உங்கள் நாணயத்தை நான் போற்றுவேன். சரி பார்த்துவிட்டு தவறு என்றால் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், இந்த நாடு முற்று முழுக்க சர்வாதிகாரத்தை நோக்கி மற்றும் பொய்யர்களை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பதுதான் பொருள்.
ஒரே நாடு, ஒரே கட்சி
அதனால்தான் மமதா பானர்ஜி கோபமடைந்து இந்த நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை குலைத்துவிடுங்கள். முற்றிலுமாக சட்டத்தை மாற்றி விடுங்கள். இனிமேல் ஒரே நாடு, ஒரே கட்சி என்று மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஒரு நாடு ஒரு மொழி என்று சொல்கிறீர்களே, அதே போல ஒரே கட்சி என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள். மாநிலங்கள் வேண்டாம். நீங்கள் மாநிலங்களை கொச்சைப்படுத்தி விட்டீர்கள், நீங்கள் எங்கள் ஏமாற்றுகிறீர்கள், எங்கள் உரிமைகளை பறிக்கிறீர்கள். இதைவிட மாநிலங்களே வேண்டாம். கலைத்து விட்டு போகலாம் என்று மமதா பானர்ஜி கோபமாக சொல்லும் அளவுக்குத்தான் நாடு போய்க்கொண்டிருக்கிறது. எதை வேண்டுமானாலும் செய்வோம் என்பது தான் எங்கள் அரசியல் வழி என்று நினைக்கிறார்கள். இவ்வாறு சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.