நிலத்தில் நின்று கொண்டு நீந்த வேண்டும் என நினைப்பது தவறு... சுமதி ஸ்ரீநிவாஸ் கூறும் வெற்றிக் கதை..!
சென்னை: குடும்பத் தலைவியாக இருந்த சுமதி ஸ்ரீநிவாஸ் சந்தர்ப்ப சூழ்நிலையால் தொழில்துறைக்குள் பிரவேசித்து இன்று நூற்றுக்கணக்கான தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளார்.
திறமையும், தன் மீதான நம்பிக்கையுமே நிறுவனம் தொடங்கியதற்கான தனது ஆரம்பகால முதலீடு எனக் கூறுகிறார் இவர்.
தன்னுடைய வெற்றிப் பயணத்தை ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்து கொண்டதன் விவரம் பின்வருமாறு;

தொழில்துறை
''நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். சர்ச் பார்க் பள்ளியில் பள்ளிப்படிப்பும், எத்திராஜ் கல்லூரியில் கல்லூரி படிப்பும் முடித்தேன். எல்லோரையும் போல் நானும் குடும்பத் தலைவியாக தான் இருந்தேன். அந்த தருணத்தில் எனக்குள் உதித்த ஒரு தீப்பொறி இன்று தொழில் முனைவோராக உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது. நமது பங்களிப்பும் குடும்பத்திற்கு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொழில்துறைக்கு வந்தேன்''.

நம்பிக்கை
''கடந்த 2003-ம் ஆண்டு டுவிலைட் கிரியேஷன்ஸ் என்ற ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை 2 ஊழியர்களுடன் தொடங்கினேன். அதற்கு முன்பாக நான் யாரிடமும் வேலை செய்ததில்லை, எந்த அனுபவமும் இல்லை. முழுக்க முழுக்க என் மீதான நம்பிக்கையையும், திறமையையும் மூலதனமாக கொண்டு பயணிக்கத் தொடங்கினேன். Mrs.ஹோம்மேக்கர் என்ற நிகழ்ச்சி தான் நான் முதன்முதலில் நடத்திய நிகழ்ச்சி. இதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததை அடுத்து 13 ஆண்டுகாலம் அந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறேன். ஜெயா தொலைக்காட்சியில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம்''.

350-க்கும் மேற்பட்டோர்
''ஊரக பகுதிகளிலும், இரண்டாம் கட்ட நகரங்களிலும் தொழில் தொடங்க ஆர்வம் இருந்தும் அதற்கான வழிமுறைகள், வழிகாட்டுதல் இல்லாத பெண்களுக்கு தேவையான ஆலோசனைகள், பயிற்சிகள் கொடுத்து வருகிறேன். இதுவரை 350-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களை உருவாக்கியிருக்கிறேன் எனக் கூறிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும், இளைஞர்களுக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் அளித்து வருகிறேன்''.

கற்க வேண்டும் என்ற ஆவல்
''இன்று எனது டுவிலைட் கிரியேஷன்ஸ் மூலம் பல கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதோடு அவர்களுக்கு தேவையான ஆவணப்படம், விளம்பரப்படம், உள்ளிட்டவைகளும் தயாரித்து கொடுக்கிறோம். பத்திரிகைதுறையை பற்றி எந்த அறிவும் இல்லாமல் WE என்ற பெயரில் மாதாந்திர இதழை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன். இன்று தென்னிந்தியாவின் முன்னணி பெண்கள் இதழாக WE திகழ்கிறது. இதற்கு காரணம் தனித்தன்மை. எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பேரார்வம் இருந்தால் எல்லாம் சாத்தியம்''.

போராட்டம்
''நிலத்தில் நின்று கொண்டே நீந்த வேண்டும் என நினைப்பது தவறு, தொழில் முனைவோராக விரும்புகிறீர்களா முதலில் கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து வெளி வரப் பழகுங்கள். பிரச்சனைகளை எதிர்கொள்ள உங்களை நீங்களே தயார் படுத்திக்கொள்ளுங்கள். தோல்வியே இல்லாமல் ஜெயித்துவிடலாம் என்ற எண்ணம் மட்டும் வேண்டாம். ஒரு தொழிலதிபர் அவரது மறைவுக்கு பிறகும் பேசப்பட வேண்டும் எனில் அதற்கேற்ப அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும்''.

ஆதரவுக்கரம்
"நாம் மட்டும் நல்லாயிருந்தால் போதாது என நினைப்பவள் நான், நம்மை சுற்றி உள்ளவர்களும் நம்மை போல் நல்லாயிருக்க வேண்டும். இதற்காக Soulmate Foundation என்ற அறக்கட்டளையை தொடங்கி பொருளாதாரம் நலிந்த நிலையில் உள்ள பெண்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். அதேபோல் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் முடிந்தவரை உதவிகளை செய்து வருகிறேன்".

சுமதி ஸ்ரீநிவாஸ்
பெண்கள் வேலைக்கு செல்வதை குற்றமாக கருதிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் சுமதி ஸ்ரீநிவாஸ். தோட்டத்திற்கு தண்ணீர் விடுவது, தையல் கலை கற்பது, சமைப்பது என்பது தான் பெண்களுக்கான எல்லைக்கோடாக நிர்ணயிக்கப்பட்ட காலத்தில், அதனைத் தாண்டி இன்று அவர் இந்த உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications