தமிழ் ஈழக் காற்றே.. ஈழம் இனப்படுகொலை.. புலம்பெயர் தமிழர்களின் வலியை பதிவு செய்த வைரமுத்து
சென்னை: இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத மனிதத் துயரம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை. உடலோ வெளிநாட்டில்; உயிரோ தாய்நாட்டில். புலம்பெயர் மக்களின் புலம்பலாக தமிழ் ஈழக் காற்றே என்ற பாடலை கவிபேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.
இந்த பாடலை விடியோவாக தயாரித்து வைரமுத்து வெளியிட்டுள்ளார். இப்பாடலுக்கு இசையரசன் இசைமைத்துள்ளார். பாடலில் ஈழத்தில் தமிழ் இனத்திற்கு நடந்த அநீதி குறித்து நெருப்பை போல் வரிகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார் வைரமுத்து.
ஈழத்தின் வன்னிக்காடுகளையும், வல்வெட்டித்துறையயையும், முல்லைத் தீவையும் நந்திக்கடலையும்ட, நல்லூர் முருகனையும் குறிப்பிட்டு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடலை வீடியோவை கேட்கும் போது, வெளிநாட்டு வாழ் ஈழத்தமிழர்களின் வலியை அப்படியே வெளிப்படுத்துவது போல் உள்ளது.
பாடல் வரிகளை இப்போது பார்ப்போம்
தமிழ் ஈழக் காற்றே!
தமிழ் ஈழக் காற்றே!
விண்ணின் வழிவந்து வீசு - எங்கள்
மண்ணின் சுகம்கண்டு பேசு
*
உயிரைக் கொடுத்த அன்னை
கயிறாய்க் கிடப்பாளோ?
எலும்பைக் கொடுத்த தந்தை
நரம்பாய்க் கிடப்பாரோ?
நல்லூர் முருகன் கோயில்மணியில்
நல்லசேதி வருமோ?
உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள்
உயிரும் உடலும் நலமோ?
ஓடிய வீதிகள் சுகமா - எங்கள்
ஒருதலைக் காதலி சுகமா?
பாடிய பள்ளிகள் சுகமா? - உடன்
படித்த அணில்கள் சுகமா?
ஒருமுறை வந்து சொல்லிப்போ - எங்கள்
உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ
*
முல்லைத் தீவின் கதறல்
மூச்சில் வலிக்கிறதே!
நந்திக் கடலின் ஓலம்
நரம்பை அறுக்கிறதே!
பிள்ளைக் கறிகள் சமைத்து முடித்த
தீயும் மிச்சம் உள்ளதோ?
எங்கள் ஊரை எரித்து மீந்த
சாம்பல் சாட்சி உள்ளதோ?
வன்னிக் காடுகள் சுகமா? - எங்கள்
வல்வெட்டித்துறையும் சுகமா?
காய்ந்த கண்ணீர் சுகமா? - இன்னும்
காயாத குருதியும் சுகமா?
ஒருமுறை வந்து சொல்லிப்போ - எங்கள்
உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ
இவ்வாறு பாடல் வரிகள் அமைந்துள்ளது. இப்பாடலை வைரமுத்து எழுதி, தயாரித்து யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.