முதல்வர் ஆய்வு.. ராணிப்பேட்டை எஸ்பி உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆய்வை தொடர்ந்து ராணிப்பேட்டை எஸ்பி உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆய்வை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்ட நிலையில் அடுத்த சில மணிநேரங்களில் அம்மாவட்ட எஸ்பியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று பகலில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று இரவு 5 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் பணிந்தீர ரெட்டி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

ராணிப்பேட்டை எஸ்பி மாற்றம்
அதன்படி ராணிப்பேட்டை எஸ்பியாக இருந்த தீபா சத்யன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தீபா சத்யனுக்கு பதிலாக சென்னைப் பெருநகர காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவின் துணை ஆணையர் கிரண் சுருதி ராணிப்பேட்டை புதிய எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் எஸ்பி இடமாற்றம்
மேலும் கடலூர் எஸ்பி சக்தி கணேசன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் கடலூர் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்பியா ரவளி பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கலெக்டர்கள் மாற்றம்
முன்னதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை கலெக்டர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்தார். அதன்படி சமூக பாதுகாப்பு இயக்குநர் வளர்மதி, ராணிப்பேட்டை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார். ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷாவா சமூக பாதுகாப்புத் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

முதல்வர் ஆய்வை தொடர்ந்து..
முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் களஆய்வு மேற்கொண்டார். வேலூரில் நடந்த களஆய்வில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத்திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். இந்நிலையில் தான் தற்போது ராணிப்பேட்டை எஸ்பி, கலெக்டர் மற்றும் திருப்பத்தூர் கலெக்டர் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications