மிக்சிகன் மாப்பிள்ளைக்கும் நாகர்கோவில் பெண்ணுக்கும் மேளம் கொட்டி தாலி கட்டி சென்னையில் கல்யாணம்
அமெரிக்க மாப்பிள்ளைக்கும் நாகர்கோவில் பெண்ணுக்கும் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
சென்னை: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் முடிச்சு போட்டு வைத்திருப்பார். அப்படித்தான் தமிழகத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த பெண்ணுக்கும் அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் பிறந்த மணமகனுக்கும் தமிழ் பாரம்பரிய முறைப்படி சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
திமுகவில் முட்டி மோதும் 3 வி.ஐ.பி.க்கள்! யாருக்கு சிம்மாசனம்? பரபரக்கும் கோவை மேயர் ரேஸ்!
இந்த திருமணத்தில் ஏராளமான சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறின.
நாகர்கோவில் பெண்
சென்னை மாதவரம் பகுதியில் வசிக்கும் நாகர்கோவில் சாமிதோப்பை பூர்விகமாக கொண்ட ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரனின் மகள் அகிலா (28). பெண் இன்ஜினீயரான இவருக்கு அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மாகாணம் மிச்சிகன் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பீட்டர் லாக்கர் மீது காதல். ஜாதி, மதம் மாறினாலே திருமணத்திற்கு சம்மதம் சொல்லாத உறவுகள் மத்தியில், நாடு தாண்டிய, தனது மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார் சந்திரன். இருவீட்டார் சம்மதத்துடன் தனது காதலரை கரம் பிடித்தார் அகிலா. கண்டம் விட்டு கண்டம் தாண்டிய காதல் வெற்றிகரமாக திருமணத்தில் முடிந்தது.
அமெரிக்க மாப்பிள்ளை வீட்டார்
சென்னை தியாகராயர்நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்களின் திருமணம் சீரும் சிறப்புமாக அய்யா வழி முறையில் திருமணம் நடைபெற்றது. அமெரிக்க மாப்பிள்ளை பீட்டர் லாக்கர் தமிழரின் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி-சட்டை அணிந்திருந்தார். அவரது தாயார் லிசா லாக்கர், சகோதரர் ஜேக் லாக்கர், அவரது மனைவி மேகன் ஆகியோரும் நமது பாரம்பரிய உடை அணிந்திருந்தனர்.
அய்யா வைகுண்டர் பாடல்
அய்யா வழி திருமணத்தில் மணப்பைண்ணும், மணமகனும் தெற்கு நோக்கி அமர்ந்திருக்க , அவர்களுடைய நெற்றியில் நாமம் சாத்தப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள வயதானவர் திருமணத்தை நடத்தி வைப்பார். திருமணத்தில் அய்யா அருளிய கல்யாண வாழ்த்து பாடல் படிக்கப்படும். " மவுளி கல்யாண மணமாலை வாழ்த்தலக்கோ" என்ற 56 வரிகள் கொண்ட வாழ்த்து படிக்கப்படும். குரு அதைப் படிக்க கூடி உள்ளவர்கள் அதை திரும்பக் கூறுவார்கள்."அரகரா என்று சொல்லி அம்மையுமாய்தான் எழுத்து " என்ற வரியை குரு 5 முறை படிப்பார். அதன் பின் குரு தாலியை எடுத்துக் மணமகன் கையில் கொடுத்து பின் சிவ சிவா என்று சொல்லி திருச்சரடு சேர்த்தனரே " என குரு படிக்க மணமகன் தாலியை மணமகள் கழுத்தில் கட்டி விடுவார். மணமக்கள் மணவறையை 5 முறை சுற்றி வருவர்கள் . பின் திருமணம் நிறைவேறிவிடும். இதுவே அய்யா வழி திருமண முறையாகும்.
அய்யா வழி நடைமுறையில் திருமணம்
இதே போல பீட்டர் அகிலா திருமணத்திலும் 'மவுளி கல்யாண மணமாலை வாழ்த்தலக்கோ...' என்ற பாடல் இசைக்க, மணமகன் பீட்டர் லாக்கர், மணப்பெண் அகிலா கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் தமிழ் முறைப்படி சடங்குகள், சம்பிராதயங்கள் நடைபெற்றன. ஏராளமானோர் மணமக்களை வாழ்த்தினர். கண்டங்களை தாண்டிய காதல் வெற்றிகரமாக திருமணத்தில் முடிந்தது. பட்டு வேட்டி சட்டையில் அழகாய் தோன்றிய அமெரிக்க மாப்பிள்ளையை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வாழ்த்தினர்.