"ஆவின் பால் பாக்கெட்டில் ரமலான் வாழ்த்து” மத மோதல்களை தூண்ட சதியாம்.. பரபர புகார் கூறும் பொன்னுசாமி
சென்னை : ஆவின் பால் பாக்கெட்டில் ரமலான் வாழ்த்துச் செய்தியை வைத்து மத மோதல்களை தூண்ட சதி செய்ய நினைப்பவர்கள் மீதும், இதுகுறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்," பொங்கல், தீபாவளி, பக்ரீத், ரமலான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் தனது பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
அதனடிப்படையில் இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகின்ற தியாகத் திருநாளாம் புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு திங்கட்கிழமை விநியோகம் செய்யப்பட்ட மூன்று வகையான ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் ரமலான் வாழ்த்துச் செய்தி இடம்பெற்றிருந்தது.

பால் பாக்கெட்டில் வாழ்த்து
குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியின் போது Nice (Toned Milk), Green Magic (Standardized Milk) இரண்டு வகையான பால் பாக்கெட்டுகளில் மட்டும் வாழ்த்துச் செய்தி வெளியிட்டு வந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2021ம் ஆண்டு முதல் Nice (Toned Milk), Green Magic (Standardized Milk), Premium (Full Gream Milk) என மூன்று வகையான பால் பாக்கெட்டுகளிலும் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டு வருகிறது.

வழக்கமான நடைமுறை
ஆனால் பக்ரீத், ரமலான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் கொண்டாடுகின்ற பண்டிகைகளுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடும் காலங்களில் அவர்களின் பண்டிகைகளுக்கு மட்டுமே ஆவின் நிறுவனம் வாழ்த்துச் செய்தி வெளியிடுவது போன்றும், இந்துக்களின் பண்டிகைகளை புறக்கணிப்பதாகவும் ஒரு சில தீயசக்திகள் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.

மதமோதல் முயற்சி
இதுபோன்ற மத மோதல்களை தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மதங்களை கடந்து மனிதம் போற்றும் வகையில் செயல்பட்டு வரும் பால்வளத்துறையை வைத்து மதவெறியை தூண்டும் தீயசக்திகள் தங்களின் மத போதைக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ஆவினை ஊறுகாயாக பயன்படுத்த நினைப்பதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
எனவே ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடுவது தொடர்பான தவறான தகவல்களை தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது காவல்துறை தரப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications