கள்ள லாட்டரி,ஆன்லைன் ரம்மி,கந்துவட்டி கொடுமை! என்னங்க நடக்குது இங்க..! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை : தமிழக மக்களின் நலனுக்கு ஒவ்வாதென அதிமுக அரசு தடை செய்தவையெல்லாம் தற்போது தமிழகத்தில் சுதந்திரமாக செயல்படுகின்றன எனவும், கந்துவட்டி கொடுமையால் காவலர் ஒருவரே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்றால் சாமானியர்களின் நிலை என்ன ஆகும்? என தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து கடனாளியானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த இனியாவது ஆன்லைன் ரம்மிக்கு அரசு தடைவிதிக்க ஆவனம் செய்ய வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்லைன் ரம்மி விவகாரம்
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இருந்த போதிலும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் மேல்முறையீடு செய்த நிலையில் நீதிமன்றம் ரத்து செய்து இருந்தது. அதன் பிறகு ஆன்லைன் ரம்மி வழக்கம் போல் தமிழகத்தில் மீண்டும் செயல்பட்டு வருகிறது.

அதிகரிக்கும் தற்கொலைகள்
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி காரணமாக பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் பணியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது குறிப்பாக தொழிலதிபர்கள், இளைஞர்கள் காவல்துறையினர் மட்டுமல்லாது இளம்பெண் ஒருவரும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இதேபோல கந்துவட்டி கொடுமை காரணமாக காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையும் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே தமிழக மக்களின் நலனுக்கு ஒவ்வாதென அதிமுக அரசு தடை செய்தவையெல்லாம் தற்போது தமிழகத்தில் சுதந்திரமாக செயல்படுகின்றன எனவும், கந்துவட்டி கொடுமையால் காவலர் ஒருவரே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்றால் சாமானியர்களின் நிலை என்ன ஆகும்? தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசுக்கு வலியுறுத்தல்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,"கடலூர்,புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் திரு.செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்ட செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கள்ள லாட்டரி,ஆன்லைன் ரம்மி,கந்துவட்டி கொடுமை என எதுவெல்லாம் தமிழக மக்களின் நலனுக்கு ஒவ்வாதென மாண்புமிகு அம்மா அவர்களும் அம்மா அரசும் தடை செய்ததோஅவையெல்லாம் தற்போது தமிழகத்தில் சுதந்திரமாக செயல்படுகின்றன. கந்துவட்டி கொடுமையால் காவலர் ஒருவரே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்றால் சாமானியர்களின் நிலை என்ன ஆகும்?கந்துவட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications