தமிழ்ப் பதிப்புலக முன்னோடி 'க்ரியா' ராமகிருஷ்ணன் கொரோனாவால் காலமானார்!
சென்னை: தமிழ்ப் பதிப்புலகத்தின் முன்னோடி க்ரியா ராமகிருஷ்ணன் (வயது 76) கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.
Recommended Video
தமிழ்ப் பதிப்புலகின் மூத்த முதுபெரும் ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன். அவரது க்ரியா தமிழ் நவீன அகராதி காலந்தோறும் தலைமுறைதோறும் தமிழருக்கு வழிகாட்டக் கூடியது.
அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையிலும் கூட க்ரியா அகராதியை மேம்படுத்தி வெளியிட்டார். மரணப் படுக்கையிலும் தமிழ்ப் பதிப்பு பணியை செய்த பேராளுமையாளர் க்ரியா ராமகிருஷ்ணன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் க்ரியா ராமகிருஷ்ணன் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மூத்த பத்திரிகையாளர் மு. குணசேகரன்: கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவந்த பதிப்புலக ஆளுமை 'க்ரியா' ராமகிருஷ்ணன் (76) இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அரை நூற்றாண்டு காலம் தமிழுக்குத் தொண்டு செய்த அவருக்கு அஞ்சலி. அவரது மறைவால் துயரில் வாடும் நண்பர்கள், குடும்பத்தினருக்கு இரங்கல்.
கடின உழைப்பில் உருவான "க்ரியா" தமிழ் நவீன அகராதி முக்கியமான பதிப்பு. ஒரு பத்திரிகையாளனாக, அன்றாடப் பணிகளில் சொற்களின் பயன்பாடு பற்றி அய்யம் எழும்போதொல்லாம் தெளிவுபெற இன்றளவும் உதவி வரும் நூல். மரணப்படுக்கையிலும் அந்நூலை விரிவுபடுத்தி வெளியிடுவதில் முனைப்பு கொண்டிருந்தார் என்கிறார் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற த.ராஜன். தன்னுடைய 45 ஆண்டு காலப் பதிப்புலகப் பயணத்தில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு மூன்று புத்தகங்களையே பதிப்பித்திருக்கிறார். ஆனால், தமிழ்ப் பதிப்பகங்களில் அவர் தொட்டிருக்கும் துறைகளைத் தொட்ட பதிப்பகம் வேறு இல்லை. அசோகமித்திரன், ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, மௌனி, ஜி.நாகராஜன், எஸ்.வி.ராஜதுரை, பூமணி, திலீப் குமார், இமையம் என்று 'க்ரியா' வழி ராமகிருஷ்ணன் கொண்டுவந்த படைப்பாளுமைகளின் படைப்புகளும் சரி; காஃப்கா, காம்யு, அந்த்வான் து எக்சுபரி, ழாக் ப்ரெவர் என்று மொழிபெயர்த்துத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய படைப்பாளிகளும் சரி; நவீன தமிழ் வெளியின் இன்றைய கட்டமைப்பில் ஆற்றியிருக்கும் பங்களிப்பு மிக முக்கியமானது. தமிழ் இலக்கிய, அறிவுலகத்தில் ராமகிருஷ்ணன் போலப் பெரும் தாக்கம் ஏற்படுத்தியவர்கள் மிகச் சிலரே. அவர் மறைந்தாலும் தமிழுக்கு அவர் தந்த கொடைகள், இன்னும் நூறாண்டுகள் பேசும்.
எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்: இன்று அதிகாலை க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் மறைந்தார். கொரோனா வாங்கிய மற்றொரு கொடும் பலி.
எந்த எழுத்தாளனுக்கும் க்ரியாவில் தனது நூல் ஒன்று வரவேண்டும் என்ற ரகசியக் கனவு இருக்கும். எந்தப் பதிப்பாளனுக்கும் க்ரியா ராமகிருஷ்ணனைபோல ஒரு நூலைப் பதிப்பிக்கவேண்டும் என்ற ஒரு சவால் இருக்கும். புத்தகங்களுக்கு அதன் வடிவமைப்பில் ஒரு கேரக்டர் இருக்கிறது என்பதை தமிழில் ஆழமாக நிறுவியர் அவர். க்ரியா வெளியிட்ட மொழிபெயர்ப்புகள் நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள் பிரமாண்டமானவை. காம்யுவின் ' அன்னியன்', சார்த்தரின் ' மீள முடியுமா?', ழாக் ப்ரவரின் ' சொற்கள்' என எத்தனை படைப்புகள் தமிழ் வாசகனுக்குள் புதிய திறப்புகளை உண்டாக்கின. இன்னொருபுறம் சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன். அசோகமித்திரன், ந.முத்துசாமி துவங்கி இமையம் வரையிலான தமிழின் முதன்மையான படைப்பாளிகளின் நூல்களை செம்மையாக பதிப்பித்த நீண்ட வரலாறு க்ரியாவுக்கு உண்டு. ஒரு படைப்பை செம்மைப்படுத்தி மேம்படுத்துவதில் எவ்வளவு உழைப்பையும் கவனத்தையும் ராமகிருஷ்ணன் மேற்கொள்வார் என்பதை அவருடன் பணியாற்றிய பல நண்பர்களும் கூறியிருக்கிறார்கள். மொழிச்செம்மை, பிழையின்மை, அழகுணர்ச்சியும் நவீனத்துவமும் கொண்ட வடிவமைப்பு என க்ரியா எப்போதும் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது.
பதிப்புத்தொழிலுக்கு எந்த மரியாதயும் இல்லாத ஒரு காலத்தில், யார் வேண்டுமானாலும் பதிப்பாளராக மாறிவிடலாம் எனும் ஒரு சூழலில் ஒரு பதிப்பாளனுக்குரிய முழுமையான இலக்கணங்களுடன் திகழ்ந்த க்ரியா ராம கிருஷ்ணனின் மறைவு ஒரு பேரிழப்பு. ஒரு எழுத்தாளனாக என் இளமைக்காலத்தை வடிவமைத்ததில் க்ரியாவின் நூல்களுக்கு பெரும் பங்கு உண்டு. க்ரியா பதிப்பித்த ஜே.ஜே சில குறிப்புகளின் அட்டைப்படம் ஒரு இளம் பருவத்து காதலியின் புகைப்படம்போல என் நெஞ்சில் பதிந்திருக்கிறது. ஒரு வாசகனாக, எழுத்தாளனாக, ஒரு சக பதிப்பாளனாக நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.
லோக்சபா எம்.பி. ரவிக்குமார்: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த க்ரியா ராமகிருஷ்ணன் இன்று அதிகாலை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து துயருற்றேன். நல்ல நண்பர் ஒருவரை இழந்த வலி நெஞ்சை அறுக்கிறது. திரு எஸ்விஆர் மொழிபெயர்த்த நூலைப்பற்றிப் பெருமிதத்தோடு பேசிக்கொண்டிருந்தார். அதுதான் அவரிடம் கடைசியாகப் பேசியது. புத்தகப் பதிப்புப் பணியை இவ்வளவு அர்ப்பணிப்போடு செய்த ஒருவரை நான் சந்தித்ததில்லை. 'எண்வயத் தொழில்நுட்பமும் தமிழ்ப் பதிப்புத் துறையும்' என்ற தலைப்பில் அவர் எழுதியது போன்ற ஒரு கட்டுரையை எழுதக்கூடிய திறன்வாய்ந்த பதிப்பாளர் எவரும் தமிழில் இல்லை. தமிழ்ப் பதிப்புலகுக்கு மாபெரும் இழப்பு. திரு ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் அஞ்சலி.