தமிழிசையே தலைவராக நீடித்தால்தான் தமிழக பாஜகவுக்கு நல்லது.. காரணம் இருக்குங்க
Recommended Video
சென்னை: தமிழக பாஜக தலைவரின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் சில ஆண்டுகள் உள்ள நிலையில் அவர் மாற்றப்படுவாரா, அடுத்து யார் என்ற வாதம் சூடு பிடித்துள்ளது. ஆனால் அடுத்த சட்டசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வரையும் தமிழிசையே நீடித்தால்தான் பாஜகவுக்கு நல்லது. காரணம் இருக்கு.
மற்ற பாஜக தலைவர்கள் பின்னால் ஏதாவது ஒரு கறை இருக்கும். ஆனால் தமிழிசைக்கு அப்படியே உல்டாவாக நல்ல இமேஜ் இருக்கிறது. அவரது தந்தையால் வந்த இமேஜ் என்று அதை வைத்துக் கொண்டாலும் கூட அதையும் தாண்டி பண்பாளர் என்ற தனிப் பெருமை தமிழிசைக்கு உண்டு.
தமிழக பாஜக தலைவராக தமிழிசை பொறுப்பேற்ற காலத்தில் தமிழகம் பரபரப்பான பல்வேறு சம்பவங்களை எதிர்கொண்டது. அதையெல்லாம் மிக அழகாக எதிர்கொண்டு சமாளித்தவர் தமிழிசைதான். புயலே வந்து தாக்கினாலும் புன்னகையுடன் எதிர்கொண்டு சமாளித்தவர் தமிழிசை. அத்தனை ஆண் தலைவர்களையும் தில்லாக எதிர்கொண்டு நிற்கிறார், சவால் விடுகிறார்.
துணிச்சலான பெண்
மற்ற கட்சிகளை போல் தமிழக பாஜகவிலும் கோஷ்டி பூசல்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் திறமையாக கையாண்டு வருபவர் தமிழிசை என்றால் அது மிகையாகாது. பெண் என்பவருக்கு எல்லா துறையும் மிகவும் சவாலானதாகும். அதிலும் அரசியலில் கேட்கவே வேண்டாம். ஏராளமான ஆண்களுக்கு மத்தியில் தம்மாலும் துணிச்சலாக செயல்பட முடியும் என்று நிரூபித்து, மாநில துணை தலைவர், தேசிய செயலாளர், மாநில தலைவர் என படிப்படியாக வளர்ந்தவர் தமிழிசை.
விமர்சனம்
தனது தந்தையின் புகழை எந்த இடத்திலும் பயன்படுத்தாதவர் தமிழிசை. வலிமையான போராட்டம் மற்றும் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர் தமிழிசை. நேரடி விவாதங்களாகட்டும், ஊடக பேட்டியாகட்டும், செய்தியாளர்கள் சந்திப்பாகட்டும் பாஜக மீதான விமர்சனத்தை மிகவும் திறமையாக கையாள்வதற்கு அவருக்கு நிகர் அவரே.
எதிர்கொள்ளும் விதம்
பொதுவாக ஒருவரின் உருவத்தை கிண்டல் செய்தல் என்பது மிகவும் கேவலமான செயலாகும். அப்படியிருக்கையில் ஒரு மாநில தலைவர் அதுவும் தேசிய கட்சியின் மாநில தலைவர் தமிழிசையின் தலைமுடியை கிண்டல் செய்து மீம்கள் வந்தாலும் அவற்றை கோபப்படாமல் சிரித்து விட்டு கடந்து விடுபவர். எத்தனை டென்ஷன் கொடுத்தாலும், ரிலாக்ஸ் புன்னகையுடன் அவர் அதை எதிர்கொளளும் விதமே தனிதான்.
பெருமை
தமிழகத்தில் மேல் மட்டத்தில் மட்டும் இருந்து வந்த பாஜகவை அடிமட்ட லெவல் வரை எடுத்துச் சென்றவர் நிச்சயம் தமிழிசைதான். சந்தேகமே தேவையில்லை. சில பாஜக தலைவர்கள் தங்களது பேச்சு, செயல்பாடுகளால் கட்சிக்கு டேமேஜை ஏற்படுத்தும்போதெல்லாம் அதை சமாளித்து சரி செய்யும் பெரும் சுமையும் இவருக்கு அடிக்கடி வந்து சேருகிறது. தமிழிசை பதவியேற்றவுடன் பாஜக மூலை முடுக்கெல்லாம் தெரிய ஆரம்பித்தது. அக்கட்சியை பட்டித் தொட்டியெல்லாம் கொண்டு சென்ற பெருமை அவரையே சாரும்.
பாஜக மத்தியில் பேச்சு
போட்டி, பொறாமை, பாலின பாகுபாடு உள்ள நிலையில் தனி ஒரு பெண்மணியாக அதிரடியான முடிவுகளை எடுக்கும் திறமைசாலி. இவரை ஒரு குட்டி ஜெயலலிதாவாகவே பெண்கள் கருதுகின்றனர். இப்போது தலைவர் பதவிக்கு அடிபடும் தலைவர்களில் 99 சதவீதம் பேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள், குறைகள் உள்ளன. எனவே புதிய ஒருவரை கொண்டு வந்து அவர் மக்களிடம் சென்று சேர்வதற்குள் விடிந்து விடும். எனவே தமிழிசை தலைமையில், வரும் தேர்தல்களை சந்திப்பதே பாஜகவுக்கு சரிப்பட்டு வரும்.. இதை நாம் சொல்லவில்லை. பாஜகவினர் மத்தியிலேயே கூட இப்பேச்சு உள்ளது.