நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கும்.. கொரோனா குறைவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.. ராதாகிருஷ்ணன் பளீச்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஜன. 28ஆம் தேதி தினசரி பாதிப்பு 26,533ஆக இருந்த நிலையில், இப்போது வெறும் 3 நாட்களில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்குக் கீழாகக் குறைந்துள்ளது.
இணையதளங்களில் சிலர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் கொரோனா பாதிப்பையும் ஒப்பிட்டு கருத்து கூறி வரும் நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆக்சிஜன் தேவை
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா புற நோயாளி பிரிவில் சுகாதாரத்துறைச் செயலர் ராதா கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொரானா 2வது அலையில் அதிக ஆக்சிஜன் தேவை இருந்தது. ஆனால் இப்போது அதுபோன்ற ஒரு நிலை ஏற்படவில்லை. நம்மிடம் இப்போது போதுமான அளவு ஆக்சிஜன் இருக்கிறது. இதில் பிரச்சினை எதுவும் இல்லை.

கொரோனா பாதிப்பு
2000 படுக்கைகள் கொண்ட இந்த (ராஜிவ் காந்தி) மருத்துவமனையில் இப்போது 121 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 65 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், 16 பேர் முதல் தவணை செலுத்திக் கொண்டவர்கள். 40 பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகமாக இருந்த கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது. இருப்பினும், கிருஷ்ணகிரி, நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நோய்த் தொற்று அதிகமாகவே உள்ளது.

பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் தொற்று குறைந்து வருகிறது, ஆன்லைன் வாயிலாகத் தொடர்ந்து மாணவர்கள் படித்தால் அவர்கள் கல்வியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆன்லைன் முறையில் கல்வி கற்று வரும் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது என உலக சுகாதார மையம் கூறுகிறது. இதன் காரணமாகவே பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் கொரோனா வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காரணமா?
தேர்தல் வருவதால் கொரோனா குறைகிறது என்று சிலர் கூறுகிறார்கள். கொரோனாவுக்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. கூட்டம் அதிகமாக இருந்தால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும். கூட்டமாக இருக்கும் இடங்களில் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் இருந்தால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும். தேர்தல் காரணமாக கொரோனா குறைவதாகக் கூறினால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது?

பொறுப்புடன் செயல்படுங்கள்
சமூக வலைத்தளங்களில் நியாயமான கருத்துகளைத் தெரிவியுங்கள். ஏனென்றால் நீங்கள் பதிவிடும் கருத்தைப் பலர் நம்பி, கவனக்குறைவாக யாரும் இருந்துவிடக் கூடாது. பொதுமக்களிடையே கொரோனா வேக்சின் செலுத்த நாங்கள் இரவு பகலாக பணியாற்றி வருகிறோம். அப்படி இருக்கும்போது தேர்தல் வந்ததால் கொரோனா பாதிப்பு குறைகிறது என்று சிலர் சொல்வது சரியானது இல்லை" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications