நவ. 26, 27 தேதிகளில்.. இந்த மாவட்ட மக்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்.. வானிலை மையம் வார்னிங்!
சென்னை: தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 26, 27 தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகளை எதிர்கொண்ட தமிழ்நாடு தற்போது மூன்றாவது காற்றழுத்த தாழ்வு பகுதிக்காக தயாராகிக்கொண்டு இருக்கிறது. வங்கக்கடலில் இன்று மூன்றாவது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலிமைபெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கிறது. முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான அதே இடத்தில், கிட்டத்தட்ட அதே பாதையில் இந்த தாழ்வு பகுதியும் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழை
இதனால் இன்று தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று உருவாகும் இந்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு கடல் பகுதியை அடையும். டெல்டா மாவட்டங்கள் அருகே வந்து பின் வடமாவட்டங்களுக்கு அருகே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது.

எச்சரிக்கை
இதனால் இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது போக நாளையில் இருந்து சனிக்கிழமை வரை தமிழ்நாட்டில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்கள்
நாளை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 25ம் தேதியில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 26, 27 தேதிகளில் வடமாவட்டங்களில், கடலோர மாவட்டங்களில், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்கே
முக்கியமாக நவம்பர் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும். இந்த மழை ஒரு நாளில் பெய்துவிட்டு ஓய்ந்துவிடாது. அடுத்த சில நாட்களுக்கு விட்டு விட்டு கனமழையாக பெய்யும்.

மக்கள் பாதுகாப்பு
சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்க போகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications