வெப்பநிலை அறிக்கை : ஏப்.2 முதல் 18 மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியல் வெப்பநிலை உயரும்
தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் ஏப்ரல் 2 முதல் அதிகபட்ச வெப்பநிலையானது இரண்டு முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. தரைக்காற்று வடமேற்கு பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி வீசத்தொடங்கி உள்ளதால் 18 மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நடப்பாண்டு அக்டோபர் தொடங்கி பிப்ரவரி வரை நாட்டின் பல பகுதிகளிலும் பருவமழை கொட்டித்தீர்த்தது. நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதே கோடை காலம் ஆரம்பித்து விட்டது. இந்த ஆண்டு கோடை காலம் எப்படி இருக்கும் என்று இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பலரையும் அச்சமடைய வைத்துத்துள்ளது.
நடப்பாண்டு கோடையில் வழக்கத்துக்கு மாறாக வட மாநிலங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், ஒப்பீட்டளவில் தென்னிந்திய மாநிலங்களில் வெப்பநிலை குறைவாக இருக்கும் என கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
பங்குனி மாதம் பிறந்த நாளில் இருந்தே தமிழகத்தில் கோடை வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. அனல் காற்று வீசி வருகிறது. சில மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்து பூமியை குளிர்வித்தது. இந்த நிலையில் வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் தெளிவாக காணப்படும், வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2ஆம் தேதியன்று தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழக பகுதி நோக்கி வீசும் சாத்தியக்கூறுகள் உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகம் பதிவாகக்கூடும்.
புதுச்சேரி, காரைக்கால் நகரங்களிலும் 3டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.