டெட் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்..தற்காலிக ஆசிரியர் நியமனங்களை நிறுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு
இடைநிலை பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் தற்காலிக நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னையில் மொட்டை அடித்து போராட்டம் நடத்தினர். பள்ளிகளில் தங்களை பணியமர்த்த கோரி 3ம் நாளாக டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
ஆசிரியர் பணியிடங்களின் தற்காலிக நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை 13,331 காலிபணியிடங்கள் உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் கல்வி நலன் கருதி, இந்த கல்வியாண்டில், 13,331 காலிபணியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க முடிவு செய்து, பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி மேலாண்மை குழுவிற்கும் அதிகாரம் வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வியில் பணியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் அரசு பள்ளிகளில் காலிபணியிடம் எவ்வாறு அறிந்துகொள்வது, நியமனம் எவ்வாறு நடைபெறும், என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று பல கேள்விகள் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இவ்வாறு, நிரப்படும் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேவி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 13,331 தற்காலிக ஆசிரியர் பணியை வாபஸ் பெற்று, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என்று ஏராளமானோர் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெற்றியில் நாமம் போட்டும் மொட்டை அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கான தேர்வர்கள் 3வது நாளாக டிபிஐ வளாகத்தில் மொட்டை அடித்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாடை கட்டியும் ஒப்பாரி வைத்தும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர் நியமனத்துக்கான உரிய வழிமுறைகள் வெளியிடப்படும் வரை, பணி நியமனம் கூடாது என்றும் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications