'இந்து அறநிலையத்துறையை ஸ்டாலின் அக்கறையுடன் கவனிக்கிறார்'.. பொன்னம்பல அடிகளார், சுகி சிவம் புகழாரம்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத் துறையைமிகுந்த அக்கறையோடு கவனித்து கொள்கிறார் என்று தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் சுகி சிவம் ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறைக்கு ஏராளாமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மற்றவர்கள் ஆக்கிரமிப்பு செய்த பல ஆயிரம் கோடி ரூபாய் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பல்வேறு திட்டங்கள்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக தமிழக அரசுக்கு பல தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்தன. இதேபோல் 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற பெயரில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்து ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திரும்பி பார்க்க வைத்தது. தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகின்றன.

புகழ்ந்து தள்ளினார்கள்
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை அதிகாரிகள், தவத்திரு குன்றக்குடி அடிகளார், ஆன்மிக பேச்சாளர் சுகி சிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய தவத்திரு குன்றக்குடி அடிகளார், சுகி சிவம் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார்கள்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு
ஆலோசனைக் குழு உறுப்பினர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூட்டத்தில் பேசியதாவது :-
நம்முடைய அறநிலையத் துறை எப்போதுமே நம்முடைய பாராட்டுதலுக்குரிய முதல்வர் ஆட்சியின் கீழ், செவ்வனே செயல்பட்டு வருகிறது. அதற்கு ஆன்மீக உள்ளங்களின் சார்பாக நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். துறையின் வெளிப்படைத் தன்மை, திருக்கோயில்களின் நிருவாகத்தை வெளிப்படைத் தன்மைக்கு உட்படுத்தியிருப்பது, பல நல்ல திட்டங்களை, பக்தர்களுக்கு மேம்படுத்தக்கூடிய வசதிகளை உருவாக்கியிருப்பது இவை யெல்லாம் வரவேற்பிற்குரியது' என்று அவர் பேசினார்.

எந்தக் கெட்ட பெயரும் வந்து விடக் கூடாது
பின்னர் சுகி சிவம் பேசுகையில், "நீண்ட காலத்திற்குப் பிறகு முதல்வருடைய நேர்பார்வையில் அறநிலையத் துறை சீரமைக்கப்படுவது ஒரு பெரிய வெற்றி என்று சொல்ல வேண்டும். காரணம், அந்தந்த அமைச்சரிடத்தில் விட்டுவிட்டு, முதலமைச்சர்கள் இதை முழுமையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஆனால் இந்தத் துறையினால், எந்தக் கெட்ட பெயரும் வந்து விடக் கூடாது என்பதில் முதலமைச்சர் மிகுந்த அக்கறையோடு இதை நேரடியாக பார்ப்பதற்கு இந்தக் குழுவின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications