இலவச ஆடு மாடு திட்டம் தொடரும்..38,800 ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 செம்மறி ஆடுகள் - முதல்வர் அறிவிப்பு
அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.
சென்னை: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் தொடரும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, ஆதரவற்ற பெண்களுக்குத் தலா 5 செம்மறி ஆடுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் இலவசமாக ஆடு, மாடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக கிராமபுறத்தில் உள்ள 50 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் கால்நடை வளர்ப்பை சார்ந்துள்ளனர். அவர்களுக்கும் உதவும் வகையில் தகுதி உடையவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் உடன் ஆடு, மாடுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
அதன் படி சொந்தமாக ஆடு, மாடுகள் வைத்திருப்பவர்கள் மற்றும் அரசு பணியில் இருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வாங்கிய ஆடுகளை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் மூலம் கால்நடைகளிடம் இருந்து கிடைக்க கூடிய பால் பொருட்கள், இறைச்சிகள் வரத்தும் அதிகரிக்கிறது. இதன் மூலம் கிராமப்புற மக்கள் அதிக வருமானம் ஈட்டுகின்றனர்.

அதிமுகவின் திட்டம் தொடரும்
இத்தகைய திட்டம் இனியும் தொடரும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடரும் என அறிவித்தார்.

சட்டசபையில் முறைகேடு
தமிழக சட்டசபையில் இன்று பேசிய தமிழ்நாடு கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக ஆட்சியில் தரமற்ற கறவை மாடுகள், ஆடுகள் வழங்கி பல முறைகேடுகளை செய்துள்ளனர். திட்டத்துக்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா சென்று கறவை மாடுகளை வாங்கியுள்ளனர். பயனாளிகளை அழைத்துச் சென்று மாடுகளை வாங்காமல் முறைகேடு செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

வெண்மைப்புரட்சி
தொடர்ந்து அவர், தனது மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் 2ஆம் வெண்மை புரட்சியை உருவாக்கும் வகையில் கிராமப்புற பெண்களை ஊக்குவிக்கவும் மாநிலத்தில் கலப்பின பசுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

பெண் பயனாளிகள்
ஒரு கிராம ஊராட்சியில் 50 பெண் பயனாளிகளை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக உருவாக்கி அவர்களின் வருவாயை அதிகரிக்கும் வகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் பெண் பயனாளிகளுக்கு 12 ஆயிரம் கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பசுக்கள் வாயிலாக 2.32 லட்சம் கன்றுகள் பிறந்துள்ளன. இதன் மூலம் கிராமப்புற ஏழை பெண்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

60 லட்சம் கோழிகள்
இதே போல் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இதில் 1 லட்சத்து 50 ஆயிரம் பெண் பயனாளிகளுக்கு 6 லட்சம் வெள்ளாடுகள்- செம்மறியாடுகள் வழங்கப்பட்டு இதுவரை 86.99 லட்சம் குட்டிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. விலையில்லா நாட்டு கோழிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 60 லட்சம் கோழிகள் 2.4 லட்சம் பெண் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

உயர்ரக கால்நடை வளர்ப்பு
தமிழ்நாட்டில் கால்நடை மற்றும் கோழியினங்களை பாதுகாத்து, உயர்ரக கால்நடை மற்றும் கோழியினங்களை கால்நடை வளர்ப்போருக்கு வழங்க 2021-23ஆம் ஆண்டில் முன்னுரிமை வழங்கப்படும்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 75.63 கோடியில் செம்மறி ஆடுகள்
ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, ஆதரவற்ற பெண்களுக்குத் தலா 5 செம்மறி ஆடுகள் வழங்கப்படும். 38,800 பெண்களுக்கு ரூ. 75.63 கோடியில் செம்மறி / வெள்ளாடுகள் 100% மானியத்தில் தரப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.

நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை
நாட்டுக்கோழி உற்பத்தியை அதிகரிக்க நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை நெல்லையில் நிறுவப்படும். தருமபுரி திருச்சி கருப்பு செம்மறி ஆட்டின ஆராய்ச்சி நிலையம் ரூபாய் 1.80 கோடியில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications