“அப்பன் பெயர் தெரியாதவர்” என அர்த்தம்.. கொந்தளித்த திருமாவளவன் - அப்படி என்ன சொன்னார் ஆளுநர் ரவி?
சென்னை: பட்டியல் சமூகத்தவரை 'ஹரிஜன்' என குறிப்பிடக் கூடாது என்பது இந்திய அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடாக இருப்பது தமிழ்நாடு ஆளுநருக்குத் தெரியுமா? தெரியாதா? என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கண்டித்துள்ள நிலையில் ஆளுநர் ரவி, இதை எப்போது எங்கு சொன்னார் என்று பார்ப்போம்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹரிஜன் என்பது கடவுள் ஹரியின் குழந்தைகள் எனும் பொருளைத் தருவதால், அது பட்டியல் சமூகத்தினரை இழிவுப்படுத்தக் கூடியதாக உள்ளது என அக்காலத்திலேயே அதற்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.
அதாவது, அச்சொல்லானது, 'அப்பன் பெயர் தெரியாதவர்கள்' என்னும் பொருளைத் தருவதால் அதனைப் பயன்படுத்தக்கூடாது என இந்திய ஒன்றிய அரசு 1982 இலேயே. ஆணையிட்டுள்ளது. அது ஆளுநருக்குத் தெரியுமா? தெரியாதா?

ஆளுநர் விளக்க வேண்டும்
அரசமைப்புச் சட்டத்தைப் போற்ற வேண்டிய ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் ஆளுநர். அவரே இப்படிப் பேசியிருப்பதால் மற்றவர்களும் அச்சொல்லைத் தயக்கமில்லாமல் பயன்படுத்தக்கூடும். எனவே, மேதகு ஆளுநர் அவர்கள் அவ்வாறு தான் பேசியது ஏன் என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

திராவிடம் மீதான வெறுப்பு
ஆதிதிராவிடர் எனும் சொல் இங்கே அதிகாரபூர்வமாக நடைமுறையிலிருக்கும்போது, ஹரிஜன் எனக் குறிப்பிட்டு பேசியது ஏன் என்கிற கேள்வி எழுகிறது? திராவிடர் என்னும் சொல் மீதான வெறுப்புதான் காரணமா? அல்லது சனாதன உளவியல்தான் காரணமா? ஆளுநர் ஏனோதானோ என பேசக்கூடியவரல்ல: பேசவும் கூடாதல்லவா? எனவே, மேதகு ஆளுநர் எத்தகைய உளவியல் நிலையிலிருந்து அவ்வாறு உரையாற்றினார் என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறோம்.

மத்திய அரசு சுற்றறிக்கை
'ஹரிஜன்' என்ற சொல்லை சாதிச் சான்றிதழிலோ பிற இடங்களிலோ பயன்படுத்தக்கூடாது என 1982 ஆம் ஆண்டிலேயே இந்திய ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. திரு. ஜைல் சிங் அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்தபோது அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. (MHA letter No 12025/ 44/80- SC & BCD I/ IV Dated 10.02.1982). அதன்பின்னரும் ஒருசிலரால் அந்தச் சொல் பயன்படுத்தப்படுவதாகப் புகார் எழுந்ததையொட்டி 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் நாள் இந்திய ஒன்றிய நலத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. ( No 12025/ 14/90 - SCD ( RL Cell) Dt 16.08.1990)

விளக்க வேண்டும்?
இந்திய ஒன்றிய அரசு இவ்வளவு சுற்றறிக்கைகளை வெளியிட்ட பின்னரும் அந்த அரசின் பிரதிநிதியாக இருக்கும் மேதகு ஆளுநர் அவர்கள் இவ்வாறு பொது வெளியில் அதுவும் மாணவர்களிடையே அந்த சொல்லைப் பயன்படுத்திப் பேசியிருப்பது சரியானதுதானா? என அவர் சிந்திக்க வேண்டும். அவரைப் பின்பற்றி வேறு யாரும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தாமல் இருக்க அவர் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஹரிஜன் சங்கம்
திருமாவளவன் கண்டிக்கும் அளவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன பேசினார்? என்பதை பார்ப்போம். சென்னையில் உள்ள எஸ்ஆர்எஸ் சர்வோதயா பள்ளியின் மகளிர் விடுதியில் நாட்டின் 75 வது சுதந்திர தின விழா மற்றும் ஹரிஜன் சேவா சங்கத்தின் 90 வது ஆண்டு விழா நடைபெற்றது.

என்ன பேசினார் ஆளுநர்?
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "ஆங்கிலேயர்கள் நம் நாட்டை மதம், இனம், மொழி என பிரித்தார்கள். அவர்களை எதிர்த்துப் போராடிய மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது தான் ஹரிஜன சங்கம்." என்றார். இந்த நேரத்தில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியை நடத்திய அமைப்பின் பெயரிலேயே ஹரிஜன் சங்கம் என்று இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications