நீதிபதி சொன்ன அடுத்த நொடியே CISF வந்தது எப்படி? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீப தூணில் தீபம் ஏற்றலாம் என சென்னை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டது. வழக்கமாக சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் வர 15 நிமிடங்கள் ஆகும் நிலையில், நேற்று அதிகாரிகள் உடனடியாக வந்ததாக அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள இந்தச் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆண்டு தோறும் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஒன்பதாம் நாளான நேற்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

எப்போதும் அடிவாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும், மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் தீபத் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இதற்கிடையே மலை உச்சியில் உள்ள கார்த்திகை மகா தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் எனச் சொல்லி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் அமைந்துள்ள தீப தூணில் தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார்.
இருப்பினும், கோயில் நிர்வாகம் உச்சி பிள்ளையார் கோயில் அருகிலேயே தீபத்தை ஏற்றியது. இதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் உதவியுடன் மலை உச்சியில் அமைந்துள்ள உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இதையடுத்து சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் ராம ரவிக்குமார் கோயிலுக்குச் செல்ல முயன்றார். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீசார் சிலர் காயமும் அடைந்தனர்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இன்றைய தினம் இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பல முக்கியமான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
வழக்கமாக நீதிபதிகள் அழைத்தால் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் வர 10-15 நிமிடங்கள் ஆகும்.. அப்படியிருக்கும்போது நேற்று நீதிபதி அழைத்த அடுத்த நொடியே சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் வந்துவிட்டனர் என்று அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையும் கூட சீக்கிரம் முடிந்து உடனடியாகத் தீர்ப்பும் வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் முன்வைத்த வாதங்களைத் தனி நீதிபதி ஏற்கவில்லை என்றும் இன்றைய தினம் அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications