மடக்கிய ரிப்போர்டர்.. மழுப்பிய மாஸ்டர்! வள்ளுவன் இந்து என்பதற்கு கூகுளில் ஆதாரம் காட்டிய கனல் கண்ணன்
சென்னை: பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியதற்காக கைதாகி சில நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்ட சினிமா சண்டை பயிற்சியாளரும் நடிகருமான கனல் கண்ணன், வள்ளுவர் இந்து என்பதற்கான ஆதாரம் கூகுளில் இருப்பதாக பேசியுள்ளார்
தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்டு மாதம் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற பெயரில் இந்து முன்னணி அமைப்பு சுற்றுப்பயணம் மற்றும் பிரச்சார பொதுக் கூட்டங்களை நடத்தி வந்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் இந்த பிரச்சாரம் நடைபெற்று வந்தது.
சென்னை மதுரவாயலில் இதற்கான நிறைவு விழா நடைபெற்றது. இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில செயலாளர் கனல் கண்ணன் கலந்து கொண்டார்.
பெரியார், அட்மின், மகாபாரதம்- எங்க திரும்பினாலும் ஹெச்.ராஜாவுக்கு கேட் போடும் ரிப்போர்ட்டர்ஸ்!
ஸ்ரீரங்கம் பெரியார் சிலை
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பேசுகையில், "நாளொன்றுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அவர்கள் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது கோவிலின் முன்பாக கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என கூறியிருந்தார்.
வலுக்கும் எதிர்ப்பு
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற கனல் கண்ணனின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இரு தரப்பினருக்கிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியுள்ள கனல் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வந்தனர்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் கனல் கண்ணனை கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் புகாரளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து, கனல் கண்ணன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்த காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
செய்தியாளர் கேள்வி
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கனல் கண்ணன் வள்ளுவர் இந்து என்று கூறினார். உடனே செய்தியாளர், வள்ளுவன் இந்துவா? என்று கேட்க இந்துதான் என்று கனல் கண்ணன் பதிலளித்தார். உடனே செய்தியாளர்கள், இந்து என்று எதில் இருக்கிறது? எந்த புத்தகத்தில் இருக்கிறது? ஆதாரம் காட்டுங்கள்.
கூகுளில் ஆதாரம்
திருவள்ளுவர் சிலையில் இருப்பது திருவள்ளுவர் தானா என்று கேட்டார். உடனே கனல் கண்ணன் வள்ளுவர் இந்துதான் என்பதற்கு அடையாளமான புகைப்படங்கள் இப்போது கூகுளில் நிறைய வந்துள்ளது. அதை பார்த்தாலே அவர்கள் தெரிந்துகொள்வார்கள்." என்றார்.