கஜாவின் போதே உதவி இருக்கலாம்.. இப்போ திருவாரூரில் தேர்தல் நடக்க போகிறது.. பதற்றத்தில் கட்சிகள்!
சென்னை: கஜா புயல் சேத பாதிப்புகள் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.
கடந்த மாதம் கஜா புயல் தமிழகத்தை தாக்கியது. டெல்டா மாவட்டங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புயல் பாதித்த மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் இந்த மாதம் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
பாதித்த திருவாரூர்
கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் பெரிய அளவில் பாதித்தது. பல ஆயிரக்கணக்கான மரங்கள் கஜா புயலால் திருவாரூரில் விழுந்தது. தென்னை மரங்கள் பல இதில் விழுந்து நாசமாகியது. கஜா இழப்பில் இருந்து இன்னும் விவசாயிகள், மக்கள் வெளியே மீண்டு வர முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அதிமுக என்ன செய்தது
புயல் பாதித்த இடங்களை பார்வையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட, ஹெலிகாப்டர் மூலம்தான் பார்வையிட்டார். இது அப்போதே பெரிய விமர்சனத்தை சந்தித்தது. மக்களை நேரடியாக சந்திக்காமல், புயல் பாதித்த இடங்களை நேரடியாக பார்வையிடாமல் முதல்வர் ஹெலிகாப்டரில் சென்றது பெரிய விமர்சனங்களை சந்தித்தது.
பாஜக
அதேபோல் மத்திய பாஜக அரசின் மீது திருவாரூர் மக்கள் பெரிய கோபத்தில் இருக்கிறார்கள். திருவாரூரில் மட்டுமே 4000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் பாஜக அரசு வெறும் 1146 கோடி ரூபாய்தான் நிவாரணம் வழங்கியுள்ளது. இதனால் பாஜக மீதான திருவாரூர் மக்களின் கோபம் தேர்தலின் போது எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
சந்திப்பு
தேர்தல் பிரச்சாரத்தின் போது திருவாரூர் கிராமங்களுக்குள் செல்லும் போது, அரசியல் கட்சியினர் எதிர்ப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளது. தேர்தலுக்கு மட்டும் வருவது ஏன் என்று மக்கள் அரசியல்வாதிகளிடம் கேட்க வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக திருவாரூர் மாவட்டத்திற்கு செல்லாத அரசியல்வாதிகள் பெரிய எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
தேர்தல் முடிவுகள்
இந்த கஜா புயல் திருவாரூரை எப்போதோ கடந்து சென்றுவிட்டாலும், இப்போதுதான் அரசியல் கட்சிகளை தாக்க போகிறது. இந்த புயல் தேர்தல் முடிவுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எந்த கட்சி புயலில் தப்பித்து வெற்றிபெறுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.