ஸ்டாலினுக்கு செக்.. கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதி இல்லை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கிராம சபை என்ற புதைந்துபோன ஒரு நடைமுறையை, மறுபடியும் புத்துணர்ச்சியுடன் வெளிக் கொண்டுவந்ததில் முக்கிய பங்கு கமலுக்குதான் போய் சேர வேண்டும்... இன்று இளைஞர்களுக்கு கிராம சபை என்ற பெயர் நன்கு பரிச்சயமாகி உள்ளது என்றால், அது மக்கள் நீதி மய்யம் எடுத்த முத்தாய்ப்பான பணிதான்.
பின்னர் கமல் பாணியிலேயே திமுகவும், கிராம சபையை கையில் எடுத்தது.. கடந்த எம்பி தேர்தலில் பெருமளவு மக்களை நெருங்குவதற்கும், வாக்குகளை பெறுவதற்கும் காரணமாக இருந்தது இந்த கிராம சபை கூட்டங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

கூட்டம்
அதனால்தான் இந்த முறையும் திமுக கிராம சபை கூட்டங்களின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது.. ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திமுக சார்பில் கிராமசபை கூட்டங்களை நடத்துவதற்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டது.. முதல்கட்டமாக ஒருசில இடங்களில் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்று தமிழக அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் உள்ள சுருக்கம் இதுதான்:

நிர்வாகம்
"தமிழ்நாடு ஊராட்சிகள் கூட்டம் 1994 இன் படி ஒவ்வொரு கிராம சபையிலும் 18 வயது நிரம்பிய வாக்களிக்கும் உரிமை கொண்ட மக்களை உள்ளடக்கி கிராமசபை அமைக்கப்பட்டுள்ளது. கிராம சபை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி அமைக்கப்படும் ஒரு நிர்வாக அமைப்பாகும், கிராம சபைகள் அந்த ஊராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவை.

குறைகள்
கிராம சபைகள் செயல்படும் முறைகள் குறித்த விரிவான விதிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குறைந்தபட்சம் நான்கு முறை அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடத்த அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது உள்ளாட்சி நிர்வாகத்தில் மிக முக்கிய பங்காற்றும் கிராம சபைகள் பகுதி மக்களின் குறைகளை களைந்து கிராம முன்னேற்றம் வழிவகுக்கிறது.

ஊராட்சிகள்
இத்தகைய கிராம சபைகள் அரசியல் சார்பற்றவை. இந்நிலையில் சில அரசியல் கட்சிகள் கிராமசபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் மக்களை குழப்புவதற்காக அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஊராட்சிகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமல்ல அந்த அமைப்பை நடவடிக்கை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அரசியல்
சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களைத் தவிர கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ கூட்டங்களை கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது, எனவே இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வழி வகை உள்ளன... அதனால், அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக கிராம சபை என்ற பெயரில் அரசியல் கட்சி அல்லது தனிநபர் கூட்டங்களை நடத்துவது பொதுமக்களை பெரும் குழப்பத்திற்கு உள்ளாகும் என்பதால் இத்தகைய நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கூட்டம்
கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு அரசால் அனுமதிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி இதுபோன்ற அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications