மின்சார விலையேற்றம் கவலை வேண்டாம்..பவர்கட் உதவி செய்யும்.. கஸ்தூரி ட்வீட்
மக்களின் கரண்ட் பில் சுமை அதிகரிக்காத வகையில் அரசாங்கம் அடிக்கடி பவர் கட் செய்து மக்களுக்கு உதவும் என்று கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.
சென்னை: மின்சார கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்த்து வரும் நிலையில் சமூக வலைத்தலைங்களில் மீம்ஸ்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. நடிகை கஸ்தூரியும் மின் கட்டண உயர்வுக்கு கிண்டலாக கருத்து பதிவிட்டுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவு அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வு
100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவர். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

எத்தனை சதவிகிதம் உயர்வு
இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

500 யூனிட்டுகள்
இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.155 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 இலட்சம் வீட்டுமின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.275 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பவர் கட் கை கொடுக்கும்
மின்சார கட்டண உயர்வுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பலரும் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கஸ்தூரியும் தனது பங்குக்கு கருத்து பதிவிட்டுள்ளார். தமிழக மின்சார வாரியத்தின் மின்சார விலையேற்றம் எதிர்பார்த்ததுதான். ஆனால் கவலை வேண்டாம். மக்களின் கரண்ட் பில் சுமை அதிகரிக்காத வண்ணம் அரசாங்கம் அடிக்கடி பவர்கட் செய்து மக்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications