பாஜகவுக்கு உடந்தையாக கதை விடும் ஆளுநரை நீக்கணும்.. பிசுபிசுத்த அண்ணாமலை திட்டம்- பரபர குற்றச்சாட்டு!
சென்னை : கோவை கார் வெடிப்பு சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளும் பாஜகவின் முயற்சிகளுக்கு தமிழக ஆளுநர் துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மாநில அரசிற்கு உள்நோக்கம் கற்பிக்க ஆளுநர் முயற்சி செய்திருப்பதாக பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
பாஜகவின் சுயநல அரசியலுக்கு உடந்தையாக இருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவின் பந்த் அறிவிப்பிற்கு பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும், தாங்கள் பந்த் அறிவிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தர் பல்ட்டி அடித்தது பாஜக என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

காவல்துறையின் துரித நடவடிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "கோவை, கார் வெடிப்பு சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளும் பாஜகவின் முயற்சிகளுக்கு ஆளுநர் துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது. கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, துரிதமாக விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை குற்றத்தில் தொடர்புடைய 6 பேரை கைது செய்ததுடன், 75 கிலோ வெடி மருந்துகளையும் கைப்பற்றியது. இவ்வழக்கில் சர்வதேச தொடர்புகள் இருக்கலாம் என நோக்கில் என்ஐஏ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழப்பத்தை ஏற்படுத்தும் அண்ணாமலை
ஆனால், இந்த சம்பவத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும் விதமாக வெளிப்படையான முயற்சிகளை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. காவல்துறை விசாரணைக்கு பாதகம் ஏற்படுத்தும் விதத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடக்கத்திலிருந்தே ஊடகங்களில் பேசி வந்தார். காவல்துறையின் உளவு பிரிவில் உள்ளோரை மத அடிப்படையில் பிரித்து, குதர்க்கமாக குறுகிய அரசியல் நோக்கத்துடனான அவரின் பேச்சுக்கள் எல்லை மீறின. இதனைத் தொடர்ந்து கோவை மாநகரில், பந்த் போராட்டம் நடத்துவோம் என்றும் பாஜக அறிவித்தது.

அந்தர் பல்ட்டி
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பந்த் நடத்துவதற்கு ஆதரவாக ஊடகங்களில் பேசினார். ஆனால், பாஜகவின் பந்த் அறிவிப்பிற்கு பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. உடனே, தாங்கள் பந்த் அறிவிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தர் பல்ட்டி அடித்தது பாஜக. மக்களிடம் பதற்றத்தைக் கிளப்பி, பந்த் செய்து கலகம் நடத்தலாம் என்ற பாஜக சங் பரிவாரத்தின் குறுகிய அரசியல் முயற்சி - அறிவிப்பிலேயே பிசுபிசுத்துவிட்டது.

அண்டா பிரியாணி கலவரம்
கடந்த காலத்திலேயே 'அண்டா பிரியாணி' கலவரமும், தற்கொலையை கொலையாக சித்தரித்து பந்த் கலகமும் செய்த சங்கி சித்து விளையாட்டுக்களை மக்கள் தெளிவாக உணர்ந்துவிட்டனர். எனவேதான், இப்போது வெட்கமற்ற முறையில் அடுத்தகட்ட சதிராட்டமாக, ஆளுநரை களமிறக்கியுள்ளது பாஜக. அவரும் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று பேசிக் கொண்டுள்ளார். மக்களை அவமதிக்க துணிந்துவிட்டார்.

கற்பனை கதை சொன்ன ஆளுநர்
கோவையில், பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், காவல்துறையின் துரிதமான செயல்பாட்டை பாராட்டிவிட்டு, என்.ஐ.ஏ விசாரணை தாமதப்படுத்தப்பட்டது என்றும் அதனால் ஆதாரங்கள் அழிய வாய்ப்புள்ளது எனவும் கற்பனை சரடுகளை விட்டுள்ளார். பயங்கரவாதத்தை உருவாக்கக் கூடிய இடமாக கோவை உள்ளது என்று தமிழக ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். ஒரு தனித்த நிகழ்வை காரணம் காட்டி, ஒட்டுமொத்த மக்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என புகழ்பெற்ற தொழில் - தொழிலாளர் நகரமான கோவையை அவமதிக்கும் விதமானது இந்தக் கருத்து.

ஆளுநர் என்.ஐ.ஏவை தான் விமர்சிக்க வேண்டும்
மாநில அரசாங்கத்திற்கு உள்நோக்கம் கற்பிக்க முயற்சி செய்திருக்கிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை வரம்பில் உள்ளவர்களே. எனவே, முன்கூட்டியே இப்படியொரு அசம்பாவிதத்தை கணித்து தடுக்க தவறியது என்.ஐ.ஏ தான். ஒருவேளை காவல்துறையோடு இணைந்து தானும் விசாரணையை நடத்த வேண்டும் என என்.ஐ.ஏ விரும்பினால் அதற்கான அதிகாரமும் அவர்களுக்கு உள்ளது. உண்மை இப்படியிருக்க ஆளுநர் விமர்சிப்பதாக இருந்தால் என்.ஐ.ஏ மீதுதான் தன் விமர்சனத்தை திருப்பியிருக்க வேண்டும்.

பொறுப்பற்ற ஆளுநர்
ஆளுநர் கதைவிட்டது போல வழக்கின் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தால் அதில் மத்திய அரசாங்கம் தான் குற்றவாளியாக இருக்க முடியும். இந்திய அரசாங்கம் என்பதே மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டாட்சிதான். எல்லை பாதுகாப்பு தவிர அனைத்து பணிகளிலும் ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து செயல்படும் விதமாகவே அரசமைப்பு உள்ளது. அரசமைப்பினை உயர்த்திப் பிடிக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் ஒற்றை ஆட்சி நிலைப்பாட்டில் நின்றுகொண்டு, பொறுப்பற்ற முறையில் அரசியல் செய்ய முயற்சிக்கிறார்.

ஆளுநரை நீக்க வேண்டும்
நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் பாஜகவின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையான கண்டனத்திற்குரியவை. அதற்கு உடந்தையாக ஆளுநர் பதவி பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று சிபிஐஎம் மாநில செயற்குழு சார்பில் வற்புறுத்துகிறோம். கோவை மக்களின் பாதுகாப்பையும், சமூக அமைதியையும் நிலைநாட்டுவதே தற்போதைய தலையாய கடமையாகும். தீவிரவாத, பிளவுவாத சக்திகளை முறியடித்திட வேண்டும். கார் வெடிப்பு வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தி, குற்றம் இழைத்தோரை தண்டிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications