மேலிடத்தில் இருந்து போலீசாருக்கு பறந்த உத்தரவு.. இன்று முதல் மீண்டும் தீவிர வாகன சோதனை
சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக பலர் வெளியில் ஜாலியாக சுற்றி வருகிறார்கள். இதையடுத்து சாலைகளில் அவசியமின்றி பொதுமக்கள் சுற்றுவதை தடுக்க வாகன சோதனையை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் வரும் 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் போலீஸாரும் வாகன சோதனைகளின் தீவிரத்தைக் குறைத்தனர்.
இதன் காரணமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் போக்குவரத்து சிக்னல்களை இயக்கினால் தான் வாகனங்கள் செல்ல முடியும் என்கிற அளவிற்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இபதிவு தளமே முடங்கும் அளவிற்கு மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஊர் சுற்றுகிறார்கள்
மாவட்டங்களுக்குள் மருத்துவ காரணங்களுக்காக செல்ல இபதிவு இல்லை என்ற காரணத்தால், கண்ட படி பலர் ஊர் சுற்ற தொடங்கி உள்ளனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பழைபடி இயல்பு நிலை திரும்பியது போல் மக்கள் கடைகளுக்கு சென்று வேண்டியதை வாங்கி வருகிறார்கள். முககவசம் அணிவதையும் பலர் கைவிட்டுவிட்டனர். இதை எந்த ஊரில் சென்றாலும் பார்க்க முடியும்.
தீவிரமாக இல்லை
எனினும் போலீசார் தளர்வு நேரம் முடிந்த பின்னர் அதாவது மாலை 6 மணிக்குபிறகு வாகன சோதனையை தீவிரமாக அமல்படுத்துகின்றனர் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, இ-பதிவு இருக்கிறதா என சோதனை செய்கிறார்கள். இ-பதிவு இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்கிறார்கள். ஆனால் காலை முதல் மாலை வரை தீவிர சோதனை நடத்தப்படவில்லை.
கண்டித்த நீதிமன்றம்
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு பெரிய அளவில் குறையவே இல்லை என்கிற நிலையே இன்றளவும் உள்ளது. அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் மக்களின் அலட்சியத்தையும் கண்டித்த. ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தியது. பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
வாகன சோதனை
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று (11-ம் தேதி) முதல் தீவிர வாகன சோதனை நடத்தப்பட உள்ளது. தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த 62 நாட்களில் மட்டும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 13.50லட்சம் வழக்குகளும், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 71,469 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.