தமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வெப்பச் சலனத்தின் காரணமாக இன்று வட கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருந்தாலும் பல மாவட்டங்களில் இன்னமும் தீவிரமடையவில்லை. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
வெயில் சுட்டெரிப்பதால் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
ஜூன் 22ஆம் தேதியன்று நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வெப்பச்சலனத்தால் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை... பலத்த காற்று வீசும்
சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.
23ஆம் தேதி நீலகிரி, கோவை ,தேனி, மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல் வருகின்ற 24ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி ,கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வறண்ட வானிலையே நிலவும்.
வரும் 25 ஆம் தேதி தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 25ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.