காஷ்மீருக்கே 3280 ரூபாய்தான்.. சென்னை டூ நெல்லைக்கு சுங்க கட்டணம் 900.. வண்டி ஓட்டுறதா வேண்டாமா?
சென்னை : நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தி இருப்பதை தொடர்ந்து வாகன பயண கட்டணம், எரிபொருள் கட்டணத்துக்கு நிகராக சுங்கச்சாவடி கட்டணங்களும் உருவெடுத்து இருக்கின்றன.
Recommended Video
தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் குறுகிய தொலைவுக்குள் அடுத்தடுத்து சுங்கச்சாவடி இருப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
சுங்கச்சாவடிகளால் போக்குவரத்து கட்டணம் உயர்வதுடன் அத்தியாசிய பொருட்களின் கட்டணம் அதிகரிப்பதாகவும், பெட்ரோல், டீசல் விலையேற்றத்தோடு இதுவும் ஒரு சுமையாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகின்றனர்

சுங்கச்சாவடிகளுக்கு தொடரும் எதிர்ப்பும்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட சுங்கச்சாவடிகளை மூடக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஒரு சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல் சுங்கச்சாவடிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகக்கூறி உயர்நீதிமன்றம் பாதி கட்டணத்தை மட்டும் வசூலிக்க உத்தரவிட்டது.

திருமாவளவன் கோரிக்கை
இந்த நிலையில்தான் அண்மையில் மக்களவையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன், தமிழ்நாட்டில் சட்டத்துக்கு புறம்பாக சுங்கச்சாவடிகள் செயல்படுவதாக தெரிவித்தார். "நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் இருக்கக்கூடாது என்ற விதியை மீறி பல சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு பணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையே 60 கி.மீ. தூரம் இடைவெளி இருக்க வேண்டும் என விதிகள் உள்ளன. ஆனால், குறுகிய இடைவெளியில் சுங்கச்சாவடிகள் உள்ளன. அனைத்தையும் மூட வேண்டும்." என வலியுறுத்தினார்.

வாக்குறுதியளித்த மத்திய அமைச்சர்
திருமாவளவனின் கோரிக்கையை தொடர்ந்து மக்களவையில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, "60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும். கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகள் 3 மாதங்களில் மூடப்படும். சுங்கச்சாவடிக்கு அருகே வசித்து வருபவர் ஆதார் அட்டையை காட்டினால் அவர்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கு பாஸ் வழங்கப்படும்." என உறுதியளித்தார்.

சொன்னது ஒன்று.. நடந்தது வேறு
இதனால் வாகன ஓட்டிகள் ஆறுதல் அடைந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் சுமார் 460 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இதனை கண்டித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமை
பெட்ரோல், டீசல் விலையேற்றம் வாகன ஓட்டிகளை வதைத்து வரும் நிலையில், சுங்கக்கட்டணம் உயர்வு கூடுதல் சுமையாக உருவெடுத்து இருப்பதை அதன் கட்டணங்கள் கண்கூடாக காட்டுகின்றன. நெல்லையிலிருந்து காரில் சென்னைக்கு 624 கி.மீ பயணிக்க சாலைபுதூர் தொடங்கி வானகரம் வரை 12 சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டியுள்ளது. இதற்காக மட்டும் ரூ.900 செலவாகிறது. இதேபோல் சென்னையிலிருந்து ஜம்மு காஷ்மீருக்கு 2,800 கி.மீ. செல்ல 44 சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டும். இதற்காக மட்டும் ரூ.3,280 செலவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பஸ் கட்டணம்
இதில் கொடுமை என்னவென்றால்.. சென்னை டூ நெல்லைக்கு ஏசி வசதியில்லாத ஆம்னி பஸ்சில் ஒரு நபருக்கான பயண கட்டணமே 900 ரூபாய்க்கும் குறைவுதான். ஆனால் டோல்கேட்டில் ஒரு நபருக்கான பயண கட்டணத்தையே மொத்தமாக வாகன உரிமையாளர்கள் செலுத்த வேண்டியிருக்கிறது என்றால், சுங்க கட்டணத்தின் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒரு பக்கம், கொரோனா காரணமாக மக்கள் சொந்த வாகனங்களை இயக்க ஆர்வம் காட்டி பொதுப் போக்குவரத்தை குறைத்தனர். ஆனால் சுங்கக் கட்டண உயர்வால் சொந்த வாகனங்கள் வைத்திருப்போர், வண்டியை பூட்டி சாவியை வீட்டில் வைத்துவிட்டு ரயிலுக்கும், பஸ்சுக்கும் அலையும் நிலைதான் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications