நெரிசலில் திணறும் மெரினா.. போக்குவரத்தை சமாளிக்க புதிய யோசனை.. இனி இந்த வழியா போகாதீங்க
சென்னை: மெரினா கடற்கரையில் விடுமுறை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் வருகை தருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க போக்குவரத்து காவல்துறையினர் சில மாற்றங்களை செய்துள்ளனர். இது இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கைகளுக்கு ஏற்ப பொழுதுபோக்குக்கான இடங்கள் அதிகரித்து வருகிறதா? என்று கேட்டால் கொஞ்சம் சந்தேகம்தான். என்னதான் தெருவுக்கு தெரு பார்க் வைத்திருந்தாலும், தியேட்டர்கள், மால்கள் இருந்தாலும் அவை போதுமானதாக இருப்பதில்லை. இரண்டாவது பார்க்கை தவிர மற்ற இடங்களில் மணிக்கணக்கில் அமர்ந்து பேச அனுமதி இருக்காது.

எனவே அனைவருக்கும் ஏற்ற ஓர் பொழுதுபோக்கு இடம் எனில் அது கடற்கரைதான். என்னதான் பெசன்ட் நகர் கடற்கரை ஓரளவு தூய்மையாக இருந்தாலும் கூட, மெரினா போல பெரியதாக இருப்பதில்லை. எனவே மெரினாவுக்கு எப்போதும் மக்கள் அலையலையாக வருகிறார்கள். குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த கூட்டத்தினரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும். எனவே கடற்கரை சாலை, அங்கிருந்து அண்ணா சாலைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மிகுந்த போக்குவரத்து நெரிசலால் சிக்கிவிடுகிறது.
இதனை சரி செய்ய போக்குவரத்து காவல்துறையினர் அவ்வப்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இதற்கான நிரந்தர தீர்வை கண்டபாடில்லை. எனவே காவல்துறை இதற்கு ஓர் முடிவெடுத்துள்ளது. அதன்படி சனி, ஞாயிறு மற்றும் இதர விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, "காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரம் வரை எவ்வித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது. கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை - பெல்ஸ் ரோடு - வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.

ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை X பாரதி சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் ரோடு சென்று அண்ணா சாலை அல்லது உழைப்பாளர் சிலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம். ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் நேராக கண்ணகி சிலைக்கு செல்ல அனுமதிக்கப்படாது. அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. (பெல்ஸ் சாலை ஓரு வழிப்பாதையாக மாற்றப்படும்).
நேப்பியர் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் நேராக கண்ணகி சிலை சென்று வலது புறம் திரும்பி பாரதி சாலை - பெல்ஸ் ரோடு - வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.
பாரதி சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கவும், வாலாஜா சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. (விக்டோரியா சாலை ஓருவழிப்பாதையாக மாற்றப்படும்) என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications