உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்.. திமுக வைத்திருக்கும் திட்டம்.. பலன் தருமா? அல்லது, விமர்சனம் வருமா?
சென்னை: வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதுதான் அரசியல் என்று சொல்வார்கள். இப்போது உள்ள வெள்ள பாதிப்பு நிலவரத்தை தங்களுக்கான அரசியல் களமாக பயன்படுத்த திமுகவும் தவறவில்லை என்று தெரிகிறது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நவம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தை கட்சியினர் இளைஞர் எழுச்சி நாள் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

மழை வெள்ளம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாட இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்காக கடந்த இரு வாரங்களாக திமுக இளைஞரணி மாவட்ட பிரிவு நிர்வாகிகள் தொடர்ந்து பல ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜூம் செயலி மூலமாக மாணவர் அணியினர் ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

ஆலோசனை கூட்டங்கள்
அத்தனை கூட்டத்திலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை மிகவும் எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து திமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் கூறுகையில்- மழை வெள்ளம் பாதித்த இந்த காலகட்டத்தில் எளிமையாக பிறந்தநாளை கொண்டாடுவது நல்லது. ஆனால் ஆட்சியில் இருப்பதால் விமரிசையாக கொண்டாடினால் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். வெள்ள பாதிப்பின் போது அதிகப்படியாக உழைத்த அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, நேரு ஆகியோருக்கு, பாராட்டு விழா நடத்தினால் அது மக்களிடையே பேசப்படும். அதை விடுத்து திமுக கட்சியில் ஒரு பிரிவினர் ஸ்டாலின் மகன் என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இது மக்களிடையே எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

தவறு இல்லை
டெல்டா மாவட்டத்தை சேர்ந்த இளைஞரணி நிர்வாகி ஒருவர் இது பற்றி பேசுகையில் கூறுகையில், இந்த குற்றச்சாட்டை மறுத்தார். எங்களது தலைவர் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடுவதில் என்ன தவறு இருக்க முடியும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கு உதயநிதி ஸ்டாலின் முக்கிய பங்காற்றினார். தேர்தல் பிரச்சாரங்களில் மக்களை ஈர்ப்பதற்கு உதயநிதி ஸ்டாலின் ஒரு காரணம். மேலும் தனது பிறந்த நாளில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி தான் அவர் கொண்டாட இருக்கிறார். இதில் தவறு கிடையாது என்று கூறுகிறார்.

உதயநிதிக்கு முக்கியத்துவம்
இது குறித்து அரசியல் பார்வையாளர் கூடலரசன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், திமுக மகளிரணி, கனிமொழி பிறந்த நாளின் போது வெகு விமரிசையாக பிறந்த நாள் கொண்டாட்டங்களை நடத்தவில்லை. ஆனால் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. திமுகவின் அடுத்த தலைவராக உதயநிதி ஸ்டாலின் மக்கள் மனதில் பதிய வைக்கப்படுகிறார். இது ஒருவகையில் கட்சிக்கு நலம் கொடுக்கலாம் இன்னொரு வகையில் விமர்சனங்களையும் பெற்று தர வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications