அமைச்சராக உதயநிதியின் முதல் நாள்.. செம பிஸி! என்னென்ன செய்தார்? எங்கெல்லாம் சென்றார்? டைம்லைன்
சென்னை: தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் அவரது முதல் நாள் செயல்பாடுகள் என்ன? எங்கெல்லாம் சென்றார் என்பதை பார்ப்போம்.
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்ற திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்தை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆளுநருக்கு பரிந்துரை செய்தார்.
முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்ற நிலையில், 14 ஆம் ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

உதயநிதி ஸ்டாலின் எனும் நான்
இதனை தொடர்ந்து இன்று காலை 9:30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமானமும், ரகசிய காப்புப் பிரமானமும் செய்தி வைத்தார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கருணாநிதியின் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டார்கள்.

அமைச்சரவை புகைப்படம்
பலரது எதிர்பார்ப்பை மெய்பிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகை வெளியே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள் அனைவருடனும் அமர்ந்து உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அண்ணா, கருணாநிதி நினைவிடம்
இதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள திமுகவின் முன்னாள் தலைவர்களும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுமான பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், மூத்த தலைவர்களுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதற்காக 2 தலைவர்களின் நினைவிடங்கள் மலரால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன.

அமைச்சர் அறை
அதன் பின்னர் அமைச்சராக முதல் முறை தலைமை செயலகம் சென்ற உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து தலைமை செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கு என தயாரான புதிய அறையின் இருக்கையில் அவரை திமுக பொதுச்செயலாளர் அமர வைத்தார்.

கோப்புகளில் கையெழுத்து
தனது அறையில் 2022 - 23 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை ரூ.47 கோடி செலவில் 16 பிரிவுகளில் நடத்துவதற்காக மாவட்ட மாநில அளவில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க கோரும் கோப்பில் கையெழுத்திட்டார். அத்துடன் நலிந்த விளையாட்டு வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3,000 லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தவும், வரும் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை விண்ணப்பித்தவர்களில் தகுதியான 9 வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் கோப்பிலும் கையெழுத்திட்டார்.

துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனைக்கு நிதியுதவி
அதேபோல் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் பெருவில் நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான தனிப்பிரிவில் வெள்ளி வென்ற கோவையை சேர்ந்த நிவேதிதாவுக்கு ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய கோப்பில் கையெழுத்திட்டு காசோலை வழங்கினார்.

தந்தை பெரியார், க.அன்பழகனுக்கு மரியாதை
தந்தை பெரியார் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியிடம் வாழ்த்து பெற்றார். அதை தொடர்ந்து திமுக முன்னாள் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வீட்டிற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி, அன்பில் படங்களுக்கு மரியாதை
இதனை தொடர்ந்து கருணாநிதியின் கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. காலணி இல்லங்களுக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யான்மொழியின் வீட்டிற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பொய்யாமொழியின் படத்திற்கும் மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications