ரத்தகசிவு.. வயிற்றிலேயே எட்டி உதைத்த போலீஸ்.. கதறிய சதாப் ஜாபரை தெரிகிறதா.. களமிறக்கிய பிரியங்கா
சதாப் ஜாபருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளார் பிரியங்கா காந்தி
சென்னை: பெண்கள் உரிமைகள், ஊழலுக்கு எதிரான போராட்டங்களை கையில் எடுக்க போகிறேன்.. சவாலை ஏற்கிறேன்.. நிச்சயம் கடுமையான போட்டியை தருவேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு" என்று உறுதியான நம்பிக்கையுடன் சொல்கிறார் உத்தரபிரதேசத்தின் சமூக போராளி சதாஃப் ஜாபர்..!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது... உபியை மீண்டும் தக்க வைத்து கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
இந்த முறையாவது உபியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.. கடந்த ஒரு வருடமாகவே பிரியங்கா உபியில்தான் முகாமிட்டு வருகிறார்.
பிரியங்கா
அதுமட்டுமல்ல, பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் பல்வேறு அதிரடிகளையும் கையில் எடுத்துள்ளார்.. அதில் ஒருபகுதியாகத்தான், உபி தேர்தலில் 40 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கப்படும் என்று சொல்லி இருந்தார்.. இதை கேட்டு பாஜகவே கொஞ்சம் மிரண்டுதான் போனது.. அதனால், உபியில் கிடப்பில் உள்ள திட்டங்களை செய்து முடித்தும், புது புது அறிவிப்புகளை வெளியிட்டும் வருகிறது.. எனினும், தான் சொன்னதை செய்து முடித்துள்ளார் உபியின் பொதுச் செயலாளரான பிரியங்கா..
வேட்பாளர்கள்
காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோரின் முதல்கட்ட வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளார். மொத்தம் 125 பேர் கொண்ட அந்த வேட்பாளர் பட்டியலில் 50 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 50 பெண்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.. பலம் வாய்ந்தவர்கள்.. ஏதோ ஒன்றினால் வலிமை பெற்றவர்கள்.. அதில் மிக முக்கியமானவர் சதாஃப் ஜாபர்..
யார் இந்த சதாஃப் ஜாபர்?
2 வருடங்களாகத்தான் இவர் பெயர் நாடு முழுவதும் உச்சரிக்கப்பட்டது.. இவர் ஒரு சமூக போராளி.. சிஏஏ சட்டத்துக்கு எதிரான எத்தனையோ போராட்டங்கள் வெகுண்டெழுந்தன.. அதில் உபியில் நடந்த போராட்டத்தை யாராலும் மறக்கவே முடியாது.. அந்த போராட்டத்தில் பங்கேற்றவர்தான் ஜாபர்.. நடந்து கொண்டிருந்த போராட்டத்தை, போராட்டகளத்திலிருந்தே நேரடியாகவே பேஸ்புக்கில் லைவ் செய்தார்.. இதை பார்த்து உபி போலீஸார் கொந்தளித்துவிட்டனர்.. இதனால் ஆத்திரமடைந்து ஜாபரை தடுத்து நிறுத்தினர்.. ஆனாலும் லைவ் செய்வதை ஜாபர் நிறுத்தவில்லை..
வலியால் துடித்தார்
இதை பார்த்த ஒரு ஆண் போலீஸ்காரர், ஜாபரின் வயிற்றிலேயே எட்டி எட்டி உதைத்தார்.. வலியால் ஜாபர் துடிதுடித்தபோதும், போராட்டத்தை கைவிடவேயில்லை.. போலீசார் லத்திகளால் கைகளிலும் கால்களிலும் அடித்துள்ளனர்... அவருக்கு உடலினுள் ரத்தக்கசிவு ஏற்பட்டது.. அப்போதும் போராட்டத்தை கைவிடவில்லை.. இறுதியில் ஜாபரை கைது செய்தனர்.. அஅவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது..
போராளி
அப்படிப்பட்ட போராளிக்குதான் இன்று சீட் தந்து அழகு பார்த்துள்ளார் பிரியங்கா.. ஒரு போராளியை கவுரவப்படுத்துவதற்கான அடையாளமாகவும் இது பார்க்கப்படுகிறது.. லக்னோவில் பலம்பொருந்திய பாஜக அமைச்சர் பிரஜேஷ் பாதக்.. இவர் மாஜி எம்பியும்கூட.. இவரை எதிர்த்துதான் ஜாபர் களமிறங்க போகிறார்.. அந்த பாஜக அமைச்சரை நீங்கள் எதிர்த்து வென்று காட்ட முடியுமா என்று ஜாபரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
சவால்
அதற்கு ஜாபர், "இது கொஞ்சம் கஷ்டம்தான்.. ஆனால் நான் ஒரு பெண்.. என்னால் போராட முடியும்.. இறுதிவரை போராடுவேன்.. அதற்கான மன உறுதி என்னிடம் உள்ளது.. இந்த ஜனநாயக நாட்டில் ஒருவரின் வலிமையை தீர்மானிப்பது மக்கள்தான்.. மக்களிடம் எளிமையான அணுகுமுறையுடன் அணுக போகிறேன்.. நிச்சயம் இந்த சவாலை ஏற்கிறேன்" என்று கர்ஜித்து சொல்கிறார் இரும்பு பெண்மணி சதாஃப் ஜாபர்..!