"வணக்கம் தமிழ்நாடு.. அந்த ஊழியரை நீக்கிவிட்டோம்".. மன்னிப்பு கேட்டது சொமேட்டோ.. பரபர விளக்கம்!
சென்னை: இந்தி தேசிய மொழி என்று கூறிய கஸ்டமர் கேர் ஊழியரை நீக்கிவிட்டதாகவும், இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பதாகவும் சொமேட்டோ நிறுவனம் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதே சமயம் அந்த ஊழியரை மீண்டும் பணியில் சேர்த்துவிட்டதாக அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழர் ஒருவரிடம் இந்தி மொழி குறித்து சொமேட்டோ கஸ்டமர் கேர் அதிகாரி பேசியது இணையம் முழுக்க சர்ச்சையாகி உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் நேற்று சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்து இருந்தார். ஆனால் இவருக்கு உணவு முழுமையாக கிடைக்காமல் பாதி பொருட்கள் மட்டுமே வந்துள்ளது.
இது தொடர்பாக அவர் கஸ்டமர் கேர் அதிகாரிகளுக்கு சொமேட்டோ கஸ்டமர் கேர் சாட் பாக்சில் புகார் அளித்துள்ளார். ஆனால் சொமேட்டோ நிறுவனத்தின் கஸ்டமர் கேர் சாட் பாக்சில் பேசிய நபர் ஆகாசுக்கு ரீபண்ட் கொடுக்க மறுத்துள்ளார்.
"இந்தி கத்துக்கோங்க".. தமிழரிடம் சொமேட்டோ சொன்ன பதில்.. கொதிக்கும் நெட்டிசன்ஸ்.. நடந்தது என்ன?
மறுப்பு
நாங்கள் உணவு நிறுவனத்திடம் பேசினோம், அப்படி தகவல் எதுவும் வரவில்லை, டெலிவரி பாயிடமும் பேசினோம் என்று சொமேட்டோ கஸ்டமர் கேர் அதிகாரி கூறியுள்ளார். அதோடு இந்தி குறித்து அந்த அதிகாரி பாடமும் எடுத்துள்ளார். நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதால் உங்களிடம் சரியாக விவரங்களை தெரிவிக்க முடியவில்லை என்றும் சொமேட்டோ அதிகாரி விகாஷிடம் கூறியுள்ளார். இதற்கு அந்த இளைஞர், நீங்கள் தமிழ்நாட்டில் சேவை வழங்கினால் தமிழ் தெரிந்த ஆட்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பதில்
தமிழில் பேசும் அதிகாரியிடம் கனெக்ட் செய்யும்படி கூறியதற்கு அந்த அதிகாரி மறுத்துள்ளார். இதற்கு பதில் அளித்த அந்த சொமேட்டோ அதிகாரி, இந்தி இந்தியாவில் தேசிய மொழி. இதனால் எல்லோரும் இந்தி தெரிந்து வைத்து இருப்பது அவசியம் என்று திமிராக பதில் அளித்துள்ளார். இதை ட்விட்டரில் பகிர்ந்து ஆகாஷ் சோமேட்டோ நிறுவனத்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
சர்ச்சை
இதுதான் இணையத்தில் சர்ச்சையாகி உள்ளது. இந்தி கத்துக்க சொல்ல நீங்கள் யார்? இந்தி யாருக்கு தேசிய மொழி சொல்லுங்கள்.என்று பலர் கேள்வி எழுப்பி டிரெண்டு செய்து வருகிறார்கள். இதனால் #Reject_Zomato என்ற டேக் தற்போது இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. எங்கள் மாநிலத்தில் உள்ள நீங்கள் எங்கள் மாநில மொழியில் சேவை வழங்குங்கள் என்று கேள்வி எழுப்பி ட்வீட் செய்து வருகிறார்கள்.
விளக்கம்
இந்த நிலையில் இது பெரிய சர்ச்சையான நிலையில் உணவு ஆர்டர் செய்த விகாஷிடமும் தமிழ்நாடு மக்களிடமும் சொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. வணக்கம் விகாஷ், எங்கள் ஊழியர் நடந்து கொண்ட விதத்திற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று கூறி அந்த அறிக்கையை சொமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், வணக்கம் தமிழ்நாடு! எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம்.
வேற்றுமையில் ஒற்றுமை
வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிரக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.
பணி நீக்கம்
இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை . ஒரு நிறுவனமாக, நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்தும் முயற்சிகளை உள்ளூர்மயமாக்கியுள்ளோம் (எ.கா. நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்), மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்ட்டர் / சர்வீஸ் சென்ட்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.
மொழி உரிமை
உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம், என்று சொமேட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த இந்தி மொழி திணிப்பு இணையம் முழுக்க பெரிய சர்ச்சையான நிலையில் அந்த ஊழியரை நீக்கி, சொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.