தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை.. "நெஞ்சார்ந்த நன்றி" திருமாவளவன் நெகிழ்ச்சி ட்வீட்!
சென்னை: தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்.2ல் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் சார்பில், காவல் ஆணையர் அலுவலகத்தில், அக்.2ல் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்த காவல்துறையிடம் மனு அளித்திருந்தார். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் பங்கெடுக்கப் போவதாக அறிவித்தனர்.
திருமா அழைப்பை ஏற்று திரளும் கட்சிகள்.. பேரணிக்கு சீமான் ஆதரவு- களத்தில் குதித்த இஸ்லாமிய அமைப்புகள்
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட சூழலில், இதனை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டன போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள், சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
காவல்துறை விளக்கம்
அதேபோல், சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் என்ற பெயரில் விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்புகளும் அனுமதி கோரியுள்ளனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையினர் இரவுபகல் பாராமல், பாதுகாப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளின் காரணமாக அக்.2ல் அனுமதி கோரப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் விசிக மனித சங்கிலி போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமாவளவன் கருத்து
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதை கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், அக்டோபர் 2ம் தேதியன்று ஆர்எஸ்எஸ் நடத்துவதாக இருந்த அணிவகுப்பைத் தடை செய்த தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கும் விசிக சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
விசிக தடை பற்றி திருமா
தொடர்ந்து விசிக சார்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு ஏராளமான அரசியல் இயக்கங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் இந்த தடை ஏமாற்றம் அளிக்கிறது. சட்டப்படி அனுமதி பெற்று பேரணியை நடத்துவோம். காவல்துறையிடம் இதுகுறித்து மனு கொடுக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.