நீங்க கிருஷ்ண பரமாத்மா அவதாரம்னா சனாதானியா அண்ணா? சீமானுக்கு விசிக வன்னி அரசு சரமாரி கேள்வி
சென்னை: தம்மை கிருஷ்ண பரமாத்மாவின் அவதாரம் என சொல்லும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை நேற்று சீமான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பேசிய சீமான், மக்கள் என்னை தேடி நிச்சயம் வருவார்கள். அதுவரை நான் பொறுமையாக இருப்பேன். நான் கிருஷ்ணபரமாத்மாவின் வாரிசாக அவதாரம் எடுத்து மக்களை காப்பாற்றுவேன். நான் ஒரு அவதாரம். அநீதி, அக்கிரமம் நடக்கும் இடத்தில் நான் வந்து நிற்பேன் என்று கூறினார்.
திராவிட இயக்க மேடைகளில் நாத்திக அரசியலைப் பேச துவங்கி பிரபலமானவர் சீமான். பின்னர் விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசியம் என தொடங்கி முப்பாட்டன் முருகன், மாயோன் கண்ணன் என்றார் சீமான். இப்போது நான் கிருஷ்ண பரமாத்மாவின் அவதாரம் என பேசியிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் விவாதமாகிவிட்டது.
https://twitter.com/VanniArasu_VCK/status/1535173794452873216
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு, சீமானுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பி பதிவிட்டுள்ளதாவது: கிருஷ்ணரை ஏற்றுக்கொண்டால் சதுர்வர்ணத்தை ஏற்றுக்கொள்வார்கள். சதுர்வர்ணத்தை ஏற்றுக்கொண்டால், சாதியக்கட்டமைப்பை ஏற்றுக்கொள்வார்கள். சாதியக்கட்டமைப்பை ஏற்றுக்கொள்பவர்களுக்கு பெயர் தான் சனாதினி அல்லது சாதிய- இந்துத்துவவாதி! இப்போது சொல்லுங்கள்
@SeemanOfficial நீங்கள் சனாதனிதானே?
நானே நால்வகை வருண அமைப்பினை அவரவர்களுக்குள்ள செயல் வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு படைத்துள்ளேன்.எனவே நானே இந்த சதுர்வருணங்களை உருவாக்கியவனானேன். - கீதை 4:13 கிருஷ்ணனை தனது முப்பாட்டன் எனவும் அந்த கிருஷ்ணன் வழி நடப்பதாகவும் பெருமைப்பட்டுக்கொள்ளும் @SeemanOfficial சனாதனியா இல்லையா? இவ்வாறு வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.