கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும்... தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்..!
சென்னை: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அமைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
திடீர் ட்விஸ்ட்.. பிரபல பைக் ரேசர் மரணத்தில் திருப்பம்.. 3 வருடம் கழித்து வந்த உண்மை.. என்ன நடந்தது
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கூடங்குளம்
கூடங்குளம் அணுமின் உலையில் அணுக் கழிவுகளை சரியாக கையாள தொழில்நுட்பம் இல்லை என்றும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் அணுமின் உற்பத்தி நடக்கிறது என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கூறி வருகின்றது. அணுக்கழிவுகளால் மிகப்பெரிய அளவில் சுற்றுச் சூழல் பாதிப்பும், கதிர் வீச்சு அபாயமும் ஏற்படும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நான் எச்சரிக்கை விடுத்துள்ளேன்.
இழுத்து மூடுக
இதன் காரணமாகவே, கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும் என தொடக்கத்தில் இருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன். கூடங்குளத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் மோசமான முறையில் உள்ளது. இதில் இருந்து வெளியேறும், அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான தொழில்நுட்பமும், கட்டமைப்பும் இல்லை.
கண்டனம்
இந்த நிலையில், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 3 மற்றும் 4 அணு உலைகள் செயல்படத் தொடங்கியதும், அவற்றிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே சேமித்து வைப்பதற்கான இடத்தேர்வு அனுமதியை இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் வழங்கியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
கற்பனைக்கு எட்டாதது
அணுக் கழிவுகளை கையாளும் கட்டமைப்புகளை உருவாக்க முடியாத நிலையில், கூடங்குளம் வளாகத்துக்குள்ளேயே கழிவுகளை கொட்டி சேமித்து வைப்பதாக கூறுவது கற்பனை செய்ய முடியாதது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அணுக் கழிவுகளை முழுமையாக செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பம் இல்லாமல் திணறி வரும் நிலையில், கூடங்குளம் வளாகத்துக்குள்ளேயே அணுக் கழிவுகளை சேமித்து வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்க இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.
அழுத்தம் தருக
எனவே, கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணு உலைகளை நிரந்தரமாக இழுத்து மூடுவதோடு, தற்போது நடந்து வரும் நான்கு உலைகள் அமைக்கும் பணிகளையும் நிறுத்த ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.