மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்த நபரை கண்மூடித்தனமாக தாக்கும் உ.பி. போலீஸ், பாஜக- வீடியோ
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்த நபரை உத்தரப்பிரதேச மாநில போலீஸாரும் பாஜக தொண்டர்களும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகியுள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து ஷாகீன்பாக் மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாஜகவின் நட்சத்திர பேச்சாளரான மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
|
பலாத்காரம்
துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என பேசினார். அது போல் பாஜ எம்.பி. பர்வேஷ் வர்மா கூறுகையில் காஷ்மீரில், அங்குள்ள காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு என்ன நடந்ததோ, அது டெல்லியிலும் நடக்கும். ஷாகீன்பாக்கில் லட்சக்கணக்கானோர் கூடியுள்ளனர். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்களது மகள்களையும், சகோதரிகளையும் பலாத்காரம் செய்து கொலையும் செய்துவிடுவார்கள்.
கண்டனங்கள்
எனவே, டெல்லி மக்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. வரும் தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால், 11ம் தேதி இரவே (தேர்தல் முடிவுகள்) ஷாகீன் பாக் இடம் காலி செய்யப்படும். அங்குள்ளவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள் என்று கூறினார். எனினும் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கே ஆதரவு கொடுத்தனர். இது போல் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கண்டனங்கள் எழுந்தன.
கருப்புக் கொடி
இவர்கள் மீது போலீஸார் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு நிகழ்ச்சிக்காக வந்துள்ளார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடிகளை காட்ட முற்பட்டார். அப்போது அவரை போலீஸார் மடக்கி பிடித்தனர்.
கண்மூடித்தனம்
இந்த நபரை போலீஸாரும் பாஜக நிர்வாகிகளும் இணைந்து கடுமையாக தாக்கினர். அந்த நபரின் முடியை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர். கருப்புக் கொடி காட்டுவது தவறென்றால் துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என கூறியது மட்டும் குற்றமில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த நபரை போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.