அடுத்த ஷாக்.. கிளம்பியது சந்தேகம்.. சித்ரா இறந்தது எப்படி.. வரதட்சணை கொடுமை இல்லை என ஆர்டிஓ அறிக்கை!
சித்ரா மரணம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
சென்னை: நடிகை சித்ரா மரணம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தி 16 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சித்ரா வரதட்சணையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அப்படியானால் சித்ரா எப்படித்தான் இறந்தார்? எதற்காக இறந்தார்? யாரால் இறந்தார் என்ற அடுத்தடுத்த சந்தேகங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன.
சித்ரா மரண விசாரணையை ஆர்டிஓ கையில் எடுத்தது.. இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேமந்த் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 14-ம் தேதி கைது செய்து புழலில் வைத்துள்ளனர்.
அறிக்கை
முதல் நாள் விசாரணையில் சித்ராவின் அப்பா, அம்மா, அக்கா, தம்பி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஹேமந்த்தின் பெற்றோர் மற்றும் ஹேமந்த்திடம் விசாரணை நடத்தினர். இதைதவிர, சித்ராவுடன் டிவி சீரியலில் நடித்த நடிகர்- நடிகைகள், சித்ரா மற்றும் ஹேமந்த் ஆகியோரின் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் உள்பட 15 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.
தற்கொலை
அனைத்து தரப்பினரின் விசாரணையை முடித்த, ஆர்டிஓ திவ்யஸ்ரீ தனது விசாரணை அறிக்கையை பூவிருந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் இன்று ஒப்படைத்தார். அந்த விசாரணை அறிக்கையில் வரதட்சணை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்யவில்லை என்று கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரதட்சணை
கல்யாணத்துக்கு சித்ராவுக்கு 50 சவரன் நகையும், ஹேமந்த்துக்கு 20 சவரன் நகையும் தர போவதாக ஏற்கனவே
சித்ராவின் பெற்றோர் சொல்லி இருந்தனராம்... அது சம்பந்தமாக சித்ராவின் அப்பாவும் தன் புகாரில் கூறியிருந்ததால்தான், இந்த ஆர்டிஓ விசாரணையே நடைபெற்றது.. ஒருவேளை வரதட்சணை கொடுமையால் சித்ரா இறந்திருப்பது உண்மையாக இருந்தால், ஹேமந்த் மறுபடியும் கைது செய்யும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.
மர்மங்கள்
ஆனால், இது வரதட்சணை கொடுமை என்று முடிவாகி விட்டது.. அப்படியானால் சித்ரா ஏன் இறந்தார்? சித்ரா இறந்து இத்தனை நாட்கள் ஆகியும் இன்னும் தற்கொலைக்கு உறுதிபட காரணம் எதுவுமே தெரியவில்லை.. ஒரு மரண வழக்கில் இத்தனை மர்ம முடிச்சுகள் சிக்கி உள்ளது ஆச்சரியமாகவும், குழப்பமாகவும் உள்ளது.,,வழக்கு விசாரணை ஒருபுறம் நியாயமாகத்தான் நடந்து வருகிறதா என்று சித்ரா தரப்பினர் தினம் தினம் சோஷியல் மீடியாவில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பரபரப்பு
ஒருபக்கம் வரதட்சணை கொடுமையால் சித்ரா இறக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.. இன்னொரு பக்கம், சித்ரா தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமாக இருக்கலாம் என்று ஹேமந்த் அப்பாவும் ஏற்கனவே சொல்லி இருந்த நிலையில், இந்த வழக்கின் போக்கு தொடர்ந்து பரபரப்பை தந்து வருகிறது..