மனசை திடப்படுத்திக்கங்க சென்னைவாசிகளே.. 2015ல் உங்களை மூழ்கடித்த செம்பரம்பாக்கம் வறண்டு போச்சு!
சென்னை: காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்து வந்து கடந்த 2015ம் ஆண்டு சென்னை நகரை மூழ்கடித்த செம்பரம்பாக்கம் ஏரி தான் சென்னை நகரின் முக்கியமான குடிநீர் ஆதாரமாகும். இந்த செம்பரம்பாக்கம் ஏறி இப்போது முற்றிலும் வறண்டு, நிலங்கள் வெடித்து பாறைகளாக காட்சி அளிக்கிறது. இதனால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆற்று நீரில் குளித்து தவழ்ந்து விளையாடி விட்டு, பிழைப்புக்காக சென்னைக்கு குடியேறியவர்கள் தான் இங்குள்ள பெரும்பான்மையான மக்கள். அவர்கள் இன்றைக்கு தண்ணீருக்காக படும் பாடு சொல்லிமாளாது. மினரல் வாட்டராக வரும் ஆற்றுநீரை காசே கொடுக்காமல் பருகியவர்கள் இன்றைக்கு எந்த சத்தும் இல்லாத ஆர்ஓ வாட்டரை 35 ரூபாய் கொடுத்து வாங்கவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் விற்பதற்கு தான் போதிய ஆட்கள் இல்லை. குடிப்பதற்கு மட்டுமே குடிநீரை வாங்கி வந்த மக்கள் குளிப்பதற்கு வாங்க தொடங்கி விட்டார்கள்.
மற்ற ஊர்களை போல் சென்னை மக்களால தண்ணீர் தேடி பயணங்கள் செய்து கொண்டுவர முடியாது என்பதால் தண்ணீர் தேவை சென்னைக்கு எவ்வளவு முக்கியம் சொல்லவே மேல உள்ள கருத்துக்களை சொல்ல வேண்டியதிருந்தது.
கட்டாந்தரையாக ஏரி
இப்போது விஷயத்துக்கு வரும் சென்னை மக்களை தண்ணீர் தேசமாக மாற்றி கண்ணீரில் கரைய வைத்த ஏரி தான் செம்பரம்பாக்கம் ஏரி. ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்த மக்களை, காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்து வந்து மயான அமைதிக்கு கொண்டு சென்ற ஏரிதான் செம்பரபாக்கம் ஏரி. அப்படிபெருங்கடல் போல் வழிந்த ஏரி இன்று கட்டாந்தரையாக வறண்டுவிட்டது.
10 கிலோமீட்டர் அளவு
கடந்த ஆண்டு செம்டம்பர் மாதம் நீர் முழுவதுமாக நிரம்பி காணப்பட்டது. எப்போதும் நீரோட்டம் நிறைந்து காணப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது முற்றிலும் வறண்டுவிட்டது. இந்த ஏரியை பொறுத்தவரையில் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவு நீளம் கொண்ட மிகப்பெரிய ஏரியாகும். 19 சிறிய மதகுகள் வழியாகவும். 5 பெரிய மதகுகள் வழியாகவும் நீர் வெளியேற்றப்படும். அதன்பிறகு சென்னையின் குடிநீருக்கு தண்ணீர் எடுப்பார்கள்.
3640 கனஅடி நீர்
கடந்த 2016ம் ஆணடு செம்பரம்பாக்கம் ஏரி வறண்டுவிட்டதால் சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் 2018ம் ஆண்டு பருவ மழை பொய்த்ததால் இப்போது முற்றிலும் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டு சென்னையில் மிகப்பெரிய அளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 3640 கனஅடிநீரை தேக்கும் வசதி கொண்ட இந்த ஏரியில் ஒரு அடி தண்ணீர் கூட தற்போது இல்லை.
கால்வாய்கள் புனரமைப்பு
செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வார தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏரியை தூர்வாரினால் ஏராளமான தண்ணீரை சேமிக்க முடியும் என மக்கள் சொல்கிறார்கள். இதேபோல் கால்வாய்களை புனரமைத்தால் தண்ணீர் சேமிப்பை அதிகரிக்க முடியும் என்றும் மக்கள் கூறுகிறார்கள்.
தண்ணீர் பஞ்சம்
நேற்று காலை 9 மணி நிலவரப்படி, பூண்டி ஏரியில் முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், 56 மி. கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. ழல் ஏரியில் முழு கொள்ளளவான 3,300 மி.கன அடியில் 3 மி.கன அடியும், சோழவரம் ஏரியில் முழு கொள்ளளவான 1,081 மி.கன அடியில் ஒரு மி.கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இந்த நீரும் கடும் வெயிலினால் ஆவியாகி குறைந்து வருகிறது. இதனால் இன்னும் சில நாட்களில் மழை பெய்யாவிட்டால் சென்னையில் ஏற்படும் குடிநீர் பஞ்சத்தை யாராலும் தவிர்க்க முடியாது என்கிறார்கள்.