"திமுக ஆட்சியின் குறைகளை சுட்டிக் காட்டுவோம்.. தவறுகளைச் சொல்வோம்” - திடீரென பாய்ந்த கே.எஸ்.அழகிரி!
காஞ்சிபுரம் : நாங்களும் தி.மு.க ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுவோம். ஆட்சி எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை விளக்கிச் சொல்வோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியாளர்கள் செய்யும் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கம் அ.தி.மு.க - பா.ஜ.கவுக்கு உள்ளது என கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்த பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

பயிற்சி முகாம்
பல்வேறு மாநிலங்களில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதற்காக உதய்ப்பூரில் சிந்தனை அமர்வுக் கூட்டம் காங். இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதனை நாடு முழுவதும் கட்சியின் உறுப்பினர்களுக்கு விளக்கும் வகையில் பயிற்சி முகாம் நடத்த கட்சி மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி மாமல்லபுரத்தில் தனியார் ரிசார்ட் ஒன்றில் நேற்று இந்த பயிற்சி முகாம் தொடங்கியது. மாமல்லபுரத்தில் நடந்த காங்கிரஸ் பயிற்சி முகாமை மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நாங்களும் தவறுகளை சுட்டிக்காட்டுவோம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "தமிழகத்தில் எங்கள் கூட்டணிக் கட்சியான தி.மு.க ஆட்சியில் இருக்கிறது. ஆட்சிக்கு எதிராக அ.தி.மு.க - பா.ஜ.க பேசுகிற காரணத்தால், அந்தக் கட்சிகள் தான் எதிர்க்கட்சி பணியை செய்வதாக, ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. அது உண்மையல்ல. நாங்களும் ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

சங்கடங்களையும் சொல்வோம்
மேலும் பேசிய கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் நல்ல ஆட்சி எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை விளக்கிச் சொல்கிற நல்ல நண்பர்களாக இருப்போம். ஆட்சியால் ஏற்படும் சங்கடங்களையும் சொல்வோம். தமிழகத்தில் ஆட்சியாளர்கள் செய்யும் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கம் அ.தி.மு.க - பா.ஜ.கவுக்கு உள்ளது. தவறான கொள்கையை, அக்கட்சிகள் கடைப்பிடிக்கின்றன எனச் சாடியுள்ளார்.

காங்கிரஸ் கண்டனம்
மேலும், "கர்நாடக அரசின் மேகதாது ஆணை விவகாரத்தில் வரைவு அறிக்கைக்கு பாஜக ஒப்புதல் அளித்து தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டது. காவிரி ஆறு எந்த எந்த மாநிலத்தில் ஓடுகிறதோ அந்த மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளித்துள்ளதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதுகுறித்து விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.

இவர்களால்தான்
பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா ஒரு தொலைகாட்சி விவாதத்தின்போது ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இஸ்லாமியர்களை பற்றி பேசுவதற்கு முல்லா இருக்கிறார், கிறிஸ்தவர்களை பற்றி பேசுவதற்கு பிஷப் இருக்கிறார், பாரதிய ஜனதா கட்சி அவர்களை பற்றி பேச வேண்டிய தேவையில்லை. இவர்களால்தான் உலகப் போர் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications