5 மாவட்டங்களில் கனமழை...15 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் - பலத்த காற்று வீசும்
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. மதுரை, திருச்சி, சென்னை, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் முடிந்த பின்னரும் அனல் காற்று வீசி வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டி வெப்பநிலை பதிவானது. ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது.
உத்தரகாண்ட்டில் பேரவலம்.. எரிந்த நிலையில் நதிகளில் கரை ஒதுங்கும் உடல்கள்.. கடித்து குதறும் நாய்கள்
சென்னை, மதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. நேற்றும், இன்றும் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது.
இடி மின்னலுடன் கனமழை
இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்கள்,சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
எத்தனை நாட்களுக்கு மழை
ஜூன் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாகும்.
வட தமிழக மாவட்டங்களில் மழை
3,4ஆம் தேதிகளில் வட தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 5ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரைக்கும் வானம் தெளிவாகவும் இரவில் மேக மூட்டத்துடன் காணப்படும்.
வெயில் சுட்டெரிக்கும்
தமிழகத்தில் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, கடலூர், புதுவை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம்,மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
பலத்த காற்று வீசும்
இன்று முதல் 3ஆம் தேதி வரைக்கும் குமரிக்கடல், இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இன்று முதல் 4ஆம் தேதி வரைக்கும் தெற்கு அரபிக்கடலோர பகுதிகளிலும் கேரளா கடலோர பகுதிகளிலும் லட்சத்தீவு பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த கடலோர பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிக்கப்பட்டுள்ளது.