நல்லாதான் பேசினேன்.. அவர் சொன்ன அந்த வார்த்தைதான் கோபத்தைத் தூண்டியது.. பெண் வக்கீல் விளக்கம்
சென்னை: சென்னை சேத்துப்பட்டில் முகக்கவசம் அணியாமல் காரில் சென்ற பெண்ணுக்கு அபராதம் விதித்த போது பெண் வழக்கறிஞர் சண்டையிட்ட வீடியோ வைரலான விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அந்த பெண் விளக்கமளித்துள்ளார்.
ஊரடங்கு நேரத்தில் சேத்துப்பட்டு சிக்னலில் வந்த காரை போக்குவரத்து போலீஸார் வழிமறித்தனர். அப்போது அதில் வந்த பெண் முகக்கவசம் அணியாததால் ரூ 500 அபராதம் விதித்தனர். இதையடுத்து அந்த பெண் தனது தாயாருக்கு போன் செய்யவே பிஎம்டபிள்யூ காரில் அவர் வந்திறங்கினார். அங்கு இருந்த போலீஸாரை "மவனே உன் யூனிபார்மை கழட்டிடுவேன்" "கொலை செஞ்சுடுவேன்" னு மிரட்டினார்.
இதுகுறித்த வீடியோ வைரலானது. இதையடுத்து அந்த பெண் மீதும் அவரது மகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் உண்மையில் அந்த இடத்தில் நடந்தது என்ன, தான் ஏன் ஆக்ரோஷமாக கத்தினேன் என்பது குறித்து அந்த பெண் வழக்கறிஞர் விகடனுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இருவரிடமும் பேட்டி
தாயும் மகளும் வழக்கறிஞர்கள். இருவரிடமும் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் மகள் ப்ரீத்தி கூறுகையில் எனது அம்மாவுக்கு மருந்து வாங்க நான் சென்றேன். எனது காரை போலீஸார் மடக்கினார். என்னிடம் எங்கே போறீங்கன்னு கேட்டாங்க நான் மருந்து வாங்க செல்வதாக கூறியும் எனது காரை ஓரமாக நிறுத்த கூறினார்கள்.
அபராதம்
உடனே எல்லா டாக்குமென்ட்களையும் காண்பிக்க சொன்னார்கள் காண்பித்தேன். எனினும் அபராதம் போட்டார்கள். சாரி சார் தெரியாமல் வந்துவிட்டேன், நான் யூடர்ன் எடுத்து வீட்டுக்கு போய்விடுகிறேன் என சொன்னேன். நான் உடனே அபராதம் போடாதீங்க சார், எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் வழக்கறிஞர்கள் என்றவுடன் அவர் என்னிடம் ஒருமையில் பேசி அறிவில்லையா என கேட்டார்.
யூனிபார்ம்
என் அம்மாவிடம் வந்த ஒரு போலீஸார், நான் யூனிபார்மை கழட்டி காண்பிக்கவா என தவறான அர்த்தத்தில் கேட்டார். அப்போதுதான் அம்மாவுக்கு கோபம் வந்து கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டினார். உடனே அண்ணன் வந்து சமாதானம் செய்தார். அப்போது போலீஸாரும் எங்களை அனுப்பி வைத்தனர். அப்போது ஒரு போலீஸ் மட்டும், "இருடி இந்த வீடியோ எப்படி வைரலாக்கி உன்னை அசிங்கப்படுத்துறேன் பாரு" என பேசினார் என்றார் ப்ரீத்தி.
மக்கள்
இதுகுறித்து ப்ரீத்தியின் தாய் கூறுகையில் மக்களை வதைக்காதீர்கள் என்றேன். வயசு பெண்ணிடம் இப்படி நடந்துக் கொள்ளலாமா என கேட்டேன். போலீஸார் அவர்களது கடமையை செய்யலாம். அதில் தவறு இல்லை, எனது மகளை மடக்கினார்கள், அபராதம் விதித்தார்கள், பின்னர் வீட்டுக்கு அனுப்பாமல் ஒருமையில் பேசியது ஏன்? என்னை போடி சொன்னார்கள், அதனால் நான் போடா என சொன்னேன். அவர்கள் எடுத்த வீடியோ முழுக்க முழுக்க என்னை ஃபோகஸ் செய்தபடியே இருந்தது.
காரில்
நான் மாஸ்க் போட்டுக் கொண்டு காரில் வைத்துவிட்டுதான் இறங்கினேன். மாஸ்க் போட்டுக் கொண்டு எப்படி பேசுவது? சாவடிச்சிடுவேனு நான் சொன்னது தவறுதான். ஒப்புக் கொள்கிறேன். வக்கீல் என்றால் பெரிய கொம்பா, அதுவா இதுவா என கேட்டார்கள், நாங்களும் சட்டம் படித்துள்ளோம் என்றார்கள். நான் உடனே நீங்கள் பிளஸ் 2 முடித்துவிட்டு பயிற்சி பெற்று வந்துள்ளீர்கள். ஆனால் நாங்கள் 5 ஆண்டுகள் சட்டம் படித்துவிட்டு வந்துள்ளோம் என்றேன், இதெல்லாம் பேசிவிட்டு வரும்போது என்னிடம் ஒருவர் கேட்கிறார், நீ என்னை யூனிபார்ம் கழட்டுவேனு சொல்றியே , நான் இப்ப யூனிபார்மை கழற்றி காமிக்கட்டா என கேட்கிறார்.
போலீஸ்காரர்
இதனால் கோபம் வந்து நான் கத்தினேன். அப்போது இன்னொரு போலீஸ்காரர் எங்களை வீட்டுக்கு போக சொன்னார், ஆனால் இந்த வீடியோவை யார் எடுத்தது என தெரியவில்லை, நானும் வீடியோ எடுக்கிறேன் என சொன்னபோது எடுடி என்றார் ஒருவர். நான் காரில் ஏறும் போது பாருடி இந்த வீடியோவை வைத்து நான் என்ன செய்கிறேன் என சவால் விடுத்தார். நீ என்னவேணாலும் செய்து கொள் என்றேன். என்னை கிண்டல் செய்து நிறைய மீம்ஸ் போடுகிறார்கள். இதே நிலை நாளை அவர்கள் வீட்டில் நடந்தால் என்ன செய்வார்கள், என் மூஞ்சியை பாரு என மீம்ஸ் போடுறாங்க, என் மகள் இந்த சூழலில் போன் செய்யும் போது நான் தலையை வாரி, லிப்ஸ்டிக் போட்டு கொண்டா வர முடியும்? நான் வளர்ந்த விதத்தை தவறாக குறிப்பிட்டு மீம்ஸ் போடுகிறார்கள், இது உங்களை தாயையே அவதூறு செய்வது போல் உள்ளது என்றார்