பெண்களுக்கு திமுக அரசு செய்தது என்ன? மகளிர் சுய உதவி குழுவில் தொடங்கி பேருந்தில் அலாரம் வரை!
சென்னை: பெண்களின் நலனை பேணும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசானது பெண்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஒரு நாட்டினுடைய முன்னேற்றம் என்பதை அந்த நாட்டில் வசிக்கும் பெண்களின் நிலையைப் பார்த்தாலே அறிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி காலம் தொடங்கி ஸ்டாலினின் கடந்த 20 மாத கால ஆட்சி வரை திமுக ஆட்சியில் பெண்களுக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

கருணாநிதி காலம்
மகளிருக்கு சொத்தில் சம உரிமை வழங்கியது, மகளிருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கியது, மகளிருக்கு உள்ளாட்சி மன்றங்களில் இடஒதுக்கீடு தந்தது, பொருளாதாரத்தில் மேம்பட மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தது என பெண்கள் முன்னேற்றத்துக்கான முன்னோடி திட்டங்களை கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலங்களில் செயல்படுத்தினார். அவரைத் தொடர்ந்து கடந்த 20 மாத கால ஆட்சியில், மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், மாணவிகள் உயர்கல்வி கற்க 'புதுமைப்பெண் திட்டம்' மூலம் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவது என ஸ்டாலின் தூள் கிளப்பி வருகிறார்.

பெண்கள் முன்னேற்றம்
இந்தியாவிலேயே முதன் முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்த பெருமை திமுக ஆட்சிக்கு தான் என்பது யாரும் மறுக்க இயலாத உண்மையாகும். தமிழகத்தில் மட்டும் மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில், 50 லட்சத்து 24 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் பெண்கள் கூட பொருளாதாரத் தன்னிறைவு பெறவேண்டும் என்பதை இலக்காக கொண்டு தாம் செயல்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு இடங்களில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

மகளிர் உதவி மையம்
குடும்ப பிரச்னை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்டஉதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்க தமிழ்நாடு அரசின் சார்பில் "181 மகளிர் உதவி மையம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மையம் ஆகும். இதேபோல் அரசு மாநகரப் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, தவறான கண்ணோட்டத்துடன் பெண்களை ஆண்கள் உரசினால் அலாரம் ஒலி எழும் வகையில் அரசு டவுன் பஸ்களில் பட்டன் அமைத்திருப்பது என பெண்கள் பாதுகாப்புக்கான பணிகள் நீள்கின்றன.

மைல்கல் திட்டம்
இதனிடையே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மட்டுமே இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த திட்டமும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு 6 முதல் 3 மாதங்களுக்கு முன்னர் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை பொறுத்தவரை இது திமுக அரசின் மைல் கல் திட்டமாக பார்க்கப்படுகிறது. இதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிதித்துறை அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து செல்வது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications