காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்.. 6 மாதம் கழித்து பாஜகவிலிருந்தே அதிரடியாக நீக்கமா? என்ன நடக்கும்?
சென்னை: தமிழக பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 6 மாதங்கள் கழித்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக பாஜகவில் கடந்த 8 ஆண்டுகளாக காயத்ரி ரகுராம் இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளையும் தலைவர் திருமாவளவனையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இது தொடர்பாக ட்விட்டரில் வார்த்தை மோதல்கள் இருந்தன.
பின்னர் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் திமுக ஆட்சியில் நடக்கும் சில பிரச்சினைகள் குறித்து டிவிட்டரில் முதல்வர் ஸ்டாலினின் ட்விட்டர் ஐடியை குறிப்பிட்டே கேள்விகளை எழுப்பி வந்தார்.
இது தப்பா?.. விளக்கமே கேட்கல.. பாஜகவில் இருந்து நீக்கிட்டாங்க..நடந்தது என்ன?காயத்ரி ரகுராம் குமுறல்
கோவை கார் வெடிப்பு சம்பவம்
அண்மையில் கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூட 1998 குண்டுவெடிப்பு தொடர்பான புகைப்படத்தை கோவை கார் வெடிப்பு சம்பவத்துடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்தது மக்களை அச்சமடைய செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு காயத்ரி கோபமாக ஒப்பீடு செய்வதற்கும் அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என குரலை உயர்த்தி கத்தி பேசினார்.
காயத்ரியின் மன வருத்தம் ஏன்
இவர் அண்மையில் வெளிநாடு, வெளிமாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனக்கு அண்ணாமலை அனுமதி அளிக்கவில்லை என்ற கோபம் அவருக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் அண்ணாமலை மீது கோபத்தை காட்டும் காயத்ரியை, அண்ணாமலையின் ஆதரவாளர்கள் டீம் ட்விட்டரில் காயத்ரியின் பெயரை குறிப்பிடாமல் இருந்தா இரு இல்லாட்டி போ என தெரிவித்திருந்தனர். இதற்கு செல்வகுமார் என்ற நிர்வாகி லைக் போட்டிருந்தார்.
மூத்த தலைவர்கள்
இதனால் காயத்ரி, செல்வகுமார் எப்போது பாஜக தலைவரானார் என நக்கலாக கேட்டிருந்தார். மேலும் தன்னை தமிழக பாஜக தலைவருக்கு எதிராக செயல்படுவது போல் சித்தரிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். ஒரு கட்டத்தில் அண்ணாமலையிடம் காசை வாங்கி கொண்டு அவர் போடும் கமென்டுகளுக்கும் மூத்த தலைவர்களை திட்டி வேறு சிலர் போடும் கமென்ட்களுக்கும் லைக் போடுங்கள் என அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் ட்வீட்டில் காயத்ரி தெரிவித்தார். இதை திமுகவினர் டிரென்ட்டாக்கினர்.
காசு கொடுத்து லைக்ஸ்?
தமிழக பாஜக காசு கொடுத்து இதை செய்கிறதா என கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில்தான் காயத்ரி கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறார் என கூறி தமிழக பாஜகவிலிருந்து அவர் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகவும் அவருடன் கட்சி தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம் என்றும் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
3 நாட்களாக தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சனம்
இதுகுறித்து கமலாலய நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்த போது, காயத்ரி கடந்த 3 நாட்களாக தலைவர் அண்ணாமலை குறித்து பொது வெளியில் விமர்சித்து வருகிறார். இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. அதனால்தான் 6 மாதம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
6 மாதங்களில் விளக்கம்
இந்த 6 மாதங்களில் அவர் கொடுக்கும் விளக்கம் ஏற்புடையதாக இருந்தால் அவர் கட்சியில் நீடிப்பார். இல்லாவிட்டால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்படுவார் என தெரிவித்தனர். இந்த நிலையில் காயத்ரியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை டெல்லி பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து அவருடைய பிரச்சினைகளை விளக்குவாரா? இல்லை தமிழக பாஜக மூத்த தலைவர்களின் ஆதரவை பெறுவாரா?
காயத்ரியின் அடுத்த முடிவு என்ன?
அண்ணாமலை நியமனத்தாலும் அவரின் செயல்பாடுகளாலும் வானதி சீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. நமீதா, குஷ்பு, காயத்ரி, கவுதமி ஆகியே 4 பெண்களை திமுகவின் சைதை சாதிக் என்பவர் ஆபாசமாக விமர்சித்ததை கண்டித்து நடந்த மகளிரணி ஆர்ப்பாட்டத்தில்கூட வானதி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. அது போல் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைவர் அண்ணாமலைக்கே தெரியாமல் வானதி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்ததாகவும் இதனால் அண்ணாமலைக்கும் கொங்கு மண்டல பாஜக தலைவர்களுக்குமான உறவில் சுமூகம் இல்லை என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் அனைவரும் ஒன்று சேர்ந்து அண்ணாமலையை எதிர்பார்ப்பார்களா? டெல்லி பாஜக தலைமையிடம் முறையிடுவார்களா? இல்லை வழக்கம் போல் பார்வையாளர்களாக இருந்து வேடிக்கை பார்ப்பார்களா. என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.