7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது?
Recommended Video
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரிய தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதை ஆளுநர் மாளிகை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு அரசியல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இவர்கள் 7 பேரையும் விடுவிக்கும் நடவடிக்கையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஈடுபட்டார். ஆனால் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏழு பேர் விடுதலையில் அமைச்சரவையின் தீர்மானம் தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக 2018-ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இந்த தீர்மானம் என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியே வராமல் இருந்தது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இந்த விஷயத்தில் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை அவர் நிராகரித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை இது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆளுநர் மாளிகையும் இதை உறுதிப்படுத்தவில்லை. எனவே இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை விளக்கம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.