மிஸ் யூ 'சூப்பர் ஸ்டார்'.. ஒருவேளை '234'ளிலும் இறங்கியிருந்தால்.. அசராமல் அடிச்சிருப்பாரோ!
சென்னை: 'நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்-ன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்' என்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் டயலாக் கடைசி வரை டயாலாக்காகவே போய்விட்டது.
இன்று தகதகக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் ரஜினி எனும் பெயர் இல்லை. 25 வருட ரஜினி ரசிகர்களின் வேள்வியில் பத்து லாரி மண் விழுந்திருக்கிறது.
திமுக vs அதிமுக என்பதே இம்முறையும் பிரதான மோதலாக இருந்தாலும், 'ரஜினி' எனும் ஃபேக்டர் இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இந்நேரம் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல மாற்றங்கள் தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கலாம். அந்த மாற்றம் 50 வருட தமிழக அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டிருக்கலாம்.
கொரோனா எனும் கொடூரம்
பாஜக பிரஷர், ரசிகர்களின் 25 ஆண்டுகால அழைப்பு, இன்னமும் மார்க்கெட் குறையாத சினிமா என்ற பல விஷயங்களை தீர ஆராய்ந்து 'நான் அரசியலுக்கு வருவது உறுதி' என்று 2017ல் அறிவித்த ரஜினி, '2021 சட்டமன்ற தேர்தல் தான் நமது குறி' என்று அப்போதே மிகத் தெளிவாக கூறிவிட்டார். அதில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை. அதற்கு ஏற்றார் போல், காலமும் கனிவுடன் கடக்க, 2020ல் 'கொரோனா' எனும் கொடூரம் வந்து உலகையே திருப்பிப் போட, வாழ்க்கை, வாழ்வாதாரம், பொருளாதாரம், வேலையின்மை, உயிர்பயம் என்று மக்களை மூச்சு விடக் கூட முடியாமல் அடித்தது. பலரது மூச்சையும் நிறுத்தியது.
அண்ணாத்த
கொரோனாவால் பெருத்த அடி வாங்கிய ரஜினியின் '2021 டார்கெட்' மிஷன், கடந்த ஆண்டே ஊசலாடத் தொடங்கிவிட்டது. தான் எப்போதோ சொன்ன, 'அதிசயம், அற்புதம்' மந்திரம், இப்போது நிகழாதா என்று ரஜினியே எண்ணி கலங்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. எனினும், உலகம் சற்று சகஜ நிலைமைக்கு திரும்ப, ரஜினி மீண்டும் 'அண்ணாத்த'-வாக உருமாற, பிறகு உடல்நிலை பாதிக்க, இறுதியில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிக்க.. மற்றதை வரலாறு அறியும்.
மிரளும் கட்சிகள்
ஒருவேளை ரஜினிக்கு, உடல்நிலை பாதிக்கப்படாமல் போயிருந்தால், ரஜினி கட்சி தொடங்கியிருந்தால், ரஜினி வேட்பளார்களை அறிவித்திருந்தால், ரஜினி நேரடியாக போட்டியிட்டிருந்தால்... பெரிதாக என்ன நடந்திருக்கப் போகுது?... பிரசாந்த் கிஷோர் சென்னையிலேயே தேர்தல் முடியும் வரை தங்கியிருப்பார். திமுக தங்களது பல வேட்பாளர்களை மாற்றி அறிவித்திருக்கும். திமுக தலைவர் ஸ்டாலின் தனது 'சிஎம் பழனிசாமி' அட்டாக் என்ற வியூகத்தை 'ரஜினி அட்டாக்' என்று மாற்றியிருப்பார். 4 - 7 அதிமுக சிட்டிங் அமைச்சர்கள் ரஜினி பக்கம் வந்திருப்பார்கள். பல வருடங்களாக திமுகவுக்காக உழைத்து உழைத்து ஓடாகி, வாரிசு அரசியலால் சிக்கி சீரழிந்து, மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் சீனியர்கள் ரஜினியிடம் கரை ஒதுங்கியிருக்கலாம். அந்த பட்டியலில் திமுக தலைமையே எதிர்பார்க்காத பெயர்களும் இருந்திருக்கலாம்.
எனது தலைமையில் கூட்டணி
அதிமுக ரஜினியை எதிர்ப்பதா, ஸ்டாலினை எதிர்ப்பதா என்ற யோசனையிலேயே பரப்புரையில் கோட்டை விட்டிருக்கும். என்ன நடந்தாலும், நாங்கள் உங்களுடன் தான் என்று 'பாமக அதிமுகவிற்கு உற்சாகம் கொடுத்து, சைடு கேப்பில், இன்னும் 20 தொகுதி எக்ஸ்ட்ரா கொடுங்க என்று 'லாக்' செய்திருக்கும். டிடிவியோ, 'எனது தலைமையை ரஜினி ஏற்றுக் கொள்ள தயார் என்றால், அவருடன் கூட்டணி வைக்க தயார்' என்று சொல்லியிருப்பார். அதைப் படம் பிடிக்கும் கேமராமேன்களில் குறைந்தது நான்கு பேராவது அங்கேயே சிரித்திருப்பார்கள்.
நாங்க பார்த்துக்குறோம்
தேமுதிக முதல் ஆளாய் ரஜினியிடம் வந்து, கடைசி ஆளாய் தொகுதி 'டீல்' முடித்திருக்கும். திமுக காங்கிரஸிடம் அவ்வளவு 'கறார்' காட்டியிருக்காது. கே.எஸ்.அழகிரியும் கண்ணீர் விட்டிருக்க மாட்டார். ஒருக்கட்டத்தில், காங்கிரஸ், 'முடிந்தால் கொடுங்கள்.. இல்லைனா நாங்க பார்த்துக்குறோம்' என்று சொல்லும் அளவுக்கு கெத்து காட்டும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அப்படியும், திமுக அடம் பிடித்திருந்தால், இரண்டாவது கட்சியாய் ரஜினியுடன் இணைந்திருக்கும். இதற்காகவே, டெல்லியில் குறைந்தது 2 நாட்களுக்காவது கேம்ப் போட்டிருந்திருப்பார் கே.எஸ்.அழகிரி.
தலைகீழாக நின்று
திருமாவுக்கு மனதுக்குள் ஆசை இருந்தாலும், 'பாஜகவின் பிரதிபலிப்பு ரஜினி' என்ற அவர்களது கடந்த கால கடுமையான குற்றச்சாட்டுக்களே அவர்களை இணையவிடாமல் தடுத்திருக்கும். வைகோ யோசித்திருக்கலாம். மக்கள் நீதி மய்யம், தேர்தலுக்கு பிறகு ரிசல்ட்டை பொறுத்து ரஜினியுடன் சங்கமித்திருக்கும். சீமான், 'ரஜினி எங்கு போட்டியிட்டாலும் நான் அவருக்கு எதிராக போட்டியிட்டு அவரை புறமுதுகிட்டு ஓடவைத்திருப்பேன்' என்று சூளுரைத்திருப்பார். சசிகலாவை அதிமுகவுடன் இணைக்க பாஜக தலைகீழாக நின்று தண்ணீர் குடித்திருக்காது. (அப்படி குடிச்சும் பிரயோஜனமில்ல)
யாருக்கு பெரும்பான்மை?
அதிமுக எனும் கட்சி நீர்த்துப் போவதன் தொடக்க புள்ளி இந்த சட்டமன்ற தேர்தலாக இருந்திருக்கலாம். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் திமுக, அதிமுக கூட்டணி வாக்குகள் பிரிந்திருக்கும். இறுதியில், ரஜினிக்கும் பெரும்பான்மை இல்லாமல், திமுகவுக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் கூட ஏற்பட்டிருக்கும். இத்தனை 'க்கும்' இன்று 'ம்ஹூம்' என்று பல்லிளித்து சென்றுவிட்டது வேறு கதை. ஆனால், ரஜினி எனும் காந்த சக்தி இந்த தேர்தலில் களம் கண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் இத்தனை வருடங்கள் பணத்தை தண்ணீராய் செலவு செய்து உழைத்த உண்மையான ரசிகர்களுக்காவது களமிறங்கியிருக்க வேண்டும்.
ரியல் சூப்பர் ஸ்டார்
உடல் நலம், உயிர் என்பது முக்கியம் என்றாலும், 'இத்தனை பேர், புகழ், பெருமை, அந்தஸ்து, சொத்து என்று அனைத்தையும் கொடுத்த தமிழ் மக்களுக்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை' என்று சொல்லி ரஜினி களமிறங்கியிருந்தால், அவர் வெற்றி பெற்றிருந்திருப்பாரோ என்னவோ, நிச்சயம் தமிழக மக்கள் மனதில் என்றும் அசைக்க முடியாத ரியல் 'சூப்பர் ஸ்டாராகவே' இருந்திருப்பார்.