அடுத்து என்ன.. அந்த அமைச்சரா? கலெக்ஷன் காட்டிட்டாரே! செந்தில் பாலாஜியை விடாமல் சீண்டும் அண்ணாமலை!
சென்னை : ஆவின் தயாரிப்புகள் விலை உயர்ந்துள்ள நிலையில் பாள்வளத்துறை அமைச்சரைப் பாராட்டும் முதல்வர் ஸ்டாலின், மின் கட்டணம் உயர்த்தப்பட்டு மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்ததற்கு செந்தில் பாலாஜியை பாராட்டப்போகிறாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
அமைச்சர் செந்தில் பாலாஜி - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.
சமீபத்தில், அண்ணாமலை அணிந்திருக்கும் வாட்ச் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்த நிலையில், தற்போது செந்தில் பாலாஜியை சீண்டியுள்ளார் அண்ணாமலை.

பால் விலை
திமுக அரசு கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றபோது தேர்தல் வாக்குறுதியின்படி, ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்பின்னர் ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி காரணமாக நெய், வெண்ணெய் உள்ளிட்டவற்றின் விலையை திமுக அரசு உயர்த்தியது. அதை தொடர்ந்து கடந்த மாதம் ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 12 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டன.

அமைச்சர் நாசர்
இந்நிலையில், சமீபத்தில் ஆவின் நெய் விலை லிட்டருக்கு 50 ரூபாயும், வெண்ணெய் விலை கிலோவுக்கு 20 ரூபாயும் உயர்த்தப்பட்டது. அடுத்தடுத்து ஆவின், நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே பால்வளத்துறை அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆவினில் அதிமுக ஆட்சியை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது. ஆவினில் பல புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்.

நாசருக்கு முதல்வர் பாராட்டு
மேலும், பால்வளத் துறை அமைச்சராக இருக்கும் நாசர், ஆவின் நிறுவனத்தில் செய்யும் ஆய்வுகளை பார்த்துள்ளேன். உணவு பொருளில் முடி விழக் கூடாது என்பதற்காக போடப்படும் தொப்பியை போட்டுக் கொண்டு ஆய்வு பணிகளை அவர் மேற்கொள்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். ஆவினில் அதிமுக ஆட்சியை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது. ஆவின் மூலம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்துள்ளனர், நம்பர் 1 தமிழ்நாடு என்ற கனவு நிறைவேறியுள்ளது என்று பேசினார்.

அடுத்து செந்தில் பாலாஜி ?
முதல்வரின் இந்தப் பாராட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "ஒரே ஆண்டில் ஆவின் பொருள்களின் விலையை 3 முறை உயர்த்தியபின், ஆவின் வருவாய் உயர்ந்துள்ளதாக பாராட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆவின் நெய்யின் விலை மட்டும் கடந்த 9 மாதங்களில் 22% உயர்ந்துள்ளது. அடுத்து என்ன, மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்ததற்கு சாராய அமைச்சரை பாராட்டவுள்ளீரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை vs செந்தில்பாலாஜி
அண்ணாமலை - அமைச்சர் செந்தில் பாலாஜி இடையேயான மோதல் போக்கு நீண்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் மூலம் வந்த வருமானம் தொடர்பாக தவறான தகவலைப் பரப்பும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்ததைக் குறிப்பிட்டு, அவரை 'சாராய அமைச்சர்' என்ற வார்த்தையை பயன்படுத்தி அண்ணாமலை விமர்சித்தார். தொடர்ந்து அந்த சொற்றொடரை பயன்படுத்தி செந்தில் பாலாஜியை சீண்டி வருகிறார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications