6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் அடுத்த வாரம் திறப்பு? - முதல்வரிடம் ஆலோசித்த பின் அறிவிப்பு
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதலில் பள்ளிகள் திறக்கப்படலாமா அல்லது 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாமா என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் 2019-2020 ஆம் கல்வியாண்டில் ஆல்பாஸ் செய்யப்பட்டன. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமே தேர்வுகள் எழுதினர்.
பழிக்கு பழி.. 3 வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற 2 பிஞ்சுகள்.. அப்படியே அதிர்ந்து போன சிவகாசி
2020-2021ஆம் கல்வியாண்டில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்றன. கொரோனா முதல் அலை சற்றே குறைந்த உடன் கடந்த ஜனவரி மாதம் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா இரண்டாவது அலை வீரியமடையவே அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டன. 1 முதல் 8 வரை படித்த மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகளுக்கு செல்லாமல் உள்ளனர்.
மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது
கடந்த 1ஆம் தேதி முதல் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகளுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உடல் ரீதியான மனரீதியான பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்களும் கவலையடைந்துள்ளனர்.
அமைச்சர் ஆலோசனை
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில் மீதமுள்ள 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தொடக்க கல்வி, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகளைத் திறப்பது குறித்து இன்று முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.
பள்ளிகள் திறப்பு எப்போது
ஆலோசனைக் கூட்டத்திற்கு செய்தியாளர்களிடம் பேசிய கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆலோசனைக்கூட்டத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை முதலில் பள்ளிகளை திறக்கலாமா? அல்லது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாமா என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
முதல்வருக்கு அறிக்கை
தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வரிடம் 15ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அதன் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்கலாம் என்றும் ஆலோசனை நடைபெற்றுள்ளதாக கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் கோவையில் குறைந்த அளவே பள்ளிக்கு வருவதாக கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் 87 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வருவதாகவும். கோவையில் 67 சதவிகித மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.