கொங்கு மண்டலத்தில் இருந்து வந்த ‘பாசிட்டிவ்’ சிக்னல்.. தனியரசு ஓபிஎஸ் அணியை ஆதரிப்பது ஏன்?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு கொங்கு மண்டலத்தில் இருந்து வந்திருக்கும் ஆதரவு பலம் சேர்த்துள்ளது.
சென்னை : இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும் களமிறங்கும் நிலையில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தனியரசு ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். தான் ஓபிஎஸ்ஸை ஆதரிப்பது ஏன் என்பது பற்றியும் விளக்கியுள்ளார் தனியரசு.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாகக் களமிறங்குகின்றனர். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பாஜக உள்ளிட்ட அதிமுக கூட்டணிக் கட்சிகள், இந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரில் யாரை ஆதரிக்கும் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது.
இந்நிலையில், அதிமுகவோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 2 முறை எம்.எல்.ஏவாக இருந்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இரு அணிகளும்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பாக, ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடவுள்ளார். அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளும் இடைத்தேர்தலில் களம் காண்கின்றன. ஏற்கனவே போட்டியிட்ட தமாகா, அதிமுகவுக்கு சீட்டை விட்டுக்கொடுத்த நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பும் களமிறங்குகிறது.

எடப்பாடி போட்டி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இரண்டு அணிகளும் தங்களுடைய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை தொடர்ச்சியாக சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவை திரட்டி வருகின்றனர். மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை தேர்வு செய்ய விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது.

ஓபிஎஸ் சந்திப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என்றும் வேட்பாளரை விரைவில் அறிவிப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், தமமுக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆதரவு கோரினார். அவர்களில் பெரும்பாலானோர், பாஜகவின் முடிவுக்குப் பிறகே தங்கள் ஆதரவு நிலையை அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

தனியரசு ஆதரவு
இந்நிலையில், கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு, கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓபிஎஸ்ஸை சந்தித்து இன்று ஆதரவு தெரிவித்தார். கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்ற கட்சியான கொங்கு இளைஞர் பேரவை, ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது ஓபிஎஸ்ஸுக்கு பலம் கொடுத்துள்ளது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, அதிமுகவோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 2 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ்ஸை தவிர்த்தால்
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, "அதிமுகவினரை ஒருங்கிணைக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்து கூறினேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிக்கிறோம். எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரப் போக்கால், அதிமுக தனது பாரம்பரிய வாக்குகளை இழந்துள்ளது. ஓபிஎஸ்-ஐ தவிர்த்தால் அதிமுகவுக்கு கிடைக்கும் பாரம்பரிய வாக்குகளே கிடைக்காது.

எடப்பாடியை நிராகரிப்பார்கள்
அதிமுக கூட்டணியில் இடைத்தேர்தல் தொடர்பாக பெரும் தடுமாற்றம் நிலவி வருகிறது. ஓபிஎஸ்ஸை தவிர்த்து விட்டு எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை வலிமை பெறச் செய்ய முடியாது. எடப்பாடி பழனிசாமியால் மட்டும் அதிமுகவை வழிநடத்த முடியாது. ஓ.பி.எஸ், தினகரன், சசிகலா ஆகியோரை நிராகரித்துவிட்டு களத்திற்குச் சென்றால் எடப்பாடி பழனிசாமியை வாக்காளர்கள் நிராகரிப்பார்கள். வாக்குகள் எதிராக திரும்பும் போது எடப்பாடி பழனிசாமி திருந்துவார்." எனத் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு ஏன்?
அதிமுகவில் கடந்த ஜூன் மாதம் எடப்பாடி - ஓபிஎஸ் மோதல் விவகாரம் தொடங்கியது முதலே தனியரசு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவே பேசி வருகிறார் தனியரசு. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பெரும்பாலானோர் ஈபிஎஸ்ஸை ஆதரித்து வரும் சூழலில் தனியரசு ஓபிஎஸ்ஸை தொடர்ந்து ஆதரித்து வருகிறார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பல சோதனைகளைச் சந்தித்தது. இரட்டை தலைமை இறுதி ஆன பிறகு, எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து அதிமுக கட்சி செயல்பட துணை நின்றவர் ஓபிஎஸ். சுயநலம் இல்லாமல் விட்டுக்கொடுத்துச் செயல்பட்டவர் என்பதால் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார் தனியரசு.












Click it and Unblock the Notifications